புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தீபக் சிங்லா. கட்சியின் கோவா மாநில இணைப் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டு அம்மாநில கட்சிப் பணிகளை கவனித்து வந்தார். டெல்லியில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் விஸ்வாஸ் நகர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளர் ஓம் பிரகாஷ் சர்மாவிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் வங்கி மோசடி தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. டெல்லி மற்றும் கோவாவில் அவருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி எதிர்க்கட்சித் தலைவருமான அதிஷி வெளியிட்ட பதிவில், "மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, ஐபேக் தேர்தல் வியூக நிறுவனத்தில் அமலாக்கத் துறை மூலம் சோதனை நடத்தி திரிணமூல் காங்கிரஸின் கட்டமைப்பு தரவுகளை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப், கோவா மாநிலங்களிலும் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு அதே அரசியல் உத்தி கையாளப்படுகிறது" என கூறியுள்ளார்.