கர்வார்: தற்சார்பு இந்தியா திட்டம் வேகமெடுக்க வேண்டும் என விமானப்படைத் தளபதி அமர் ப்ரீத் சிங் கூறியுள்ளார்.
உள்நாட்டில் எச்ஏஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானம் திட்டம் மிகவும் தாமதமாகி வருவதாக விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் குற்றம் சாட்டினார். இந்நிலையில் குறைந்த ஆழத்தில் இயங்கி நீர்மூழ்கி கப்பல்களை தாக்கும் திறன் படைத்த ஐஎன்எஸ் மால்வன் போர்க்கப்பல் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்கப்பட்டது.
இதை கடற்படையில் இணைக்கும் விழா கர்நாடகாவின் கர்வாரில் உள்ள ஷீ பேர்ட் கடற்படை தளத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் விமானப்படை தளபதி அமர் ப்ரீத் சிங் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசியதாவது:
உள் நாட்டிற்குள்ளேயே ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை மேற்கொள்வது அவசியம். அது வேகமாக இருப்பது முக்கியம். தாமதமாக உருவாகும் தொழில்நுட்பம் மறுக்கப்பட்ட தொழில்நுட்பத்திற்குச் சமம். நாம் ஒன்றை உற்பத்தி செய்து முடிப்பதற்குள் உலகம் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டால், நாம் செய்த முயற்சிக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும்.
80% உள்நாட்டு பாகங்கள்
ஐஎன்எஸ் மால்வன் போர்க்கப்பலில் 80 சதவீதம் உள்நாட்டு உதிரிபாகங்களைப் பயன்படுத்தியதற்காகக் கடற்படைக்குப் பாராட்டுக்கள். இந்திய விமானப்படையும் இதைப் பின்பற்ற வேண்டும். உள்நாட்டு தொழில்நுட்பம் என்ற கோட்பாட்டை இந்திய கடற்படை மிக ஆரம்பத்தில் இருந்தே செயல்படுத்தி வருகிறது. இதைப் விமானப்படை புரிந்துகொண்டு செயல்படுத்தச் சிறிது காலம் எடுத்துக் கொண்டது. ஏனெனில் வெவ்வேறு துறைகள் வளர்ச்சியடைய வெவ்வேறு கால அவகாசம் தேவைப்படுகிறது.
கப்பல் கட்டுவதைப் பொறுத்தவரை, இந்தியா எப்போதும் ஒரு படி முன்னணியில் உள்ளது. கப்பல் கட்டும் துறையில் தற்சார்பு அடைவதில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய கடற்படையிடம் இருந்து மற்ற இரண்டு படைகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். கப்பல் கட்டும் பணி தொடங்கியதிலிருந்தே இந்திய கடற்படை அதிகாரிகள் அதில் நேரடியாக இணைந்து பணியாற்றுகிறார்கள்.
அந்த அதிகாரிகள் அதே துறையில் வளர்ந்து, அக்கப்பல் கட்டும் தளத்தின் மிக மூத்த அதிகாரிகளாக உருவெடுக்கிறார்கள். தற்சார்பு என்ற நமது கனவு விரைவில் நனவாக, இந்திய விமானப்படையும் பாடுபட வேண்டும். இவ்வாறு அமர் ப்ரீத் சிங் கூறினார்.