மேட்டூர் அணை.
புதுடெல்லி: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படியும், காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படியும் கர்நாடகம் தண்ணீர் திறப்பதை உறுதி செய்யக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் 13-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாடு - கர்நாடகா மாநிலத்திற்கு இடையே காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப்போராட்டத்தின் முடிவாக கடந்த 2018-ம் ஆண்டில் தமிழகத்திற்கு 404.25 டி.எம்.சி நீரும், கர்நாடகாவிற்கு 284.75 டி.எம்.சி நீர் என நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கியதுடன், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்கவும் உத்தரவிட்டது. அதன்படி மத்திய அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைத்தது.
இதனையடுத்து, காவிரியில் மாதம் தோறும் எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய அட்டவணையின் அடிப்படையில் நீர் வழங்கப்பட்டு வந்தது, ஆனால் அவ்வப்போது நீர் பற்றாக்குறையை காரணம் காட்டி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடகா இழுத்தடித்து வந்தது.
இந்நிலையில், ஜூலை மாதம் தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விட வேண்டிய நீரை கர்நாடகா திறக்காத நிலையில், இது தொடர்பாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு முறையிட்டது. இதனையடுத்து, தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 3,500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
ஆனால் ஆணையம் உத்தரவிட்டும், நீர் பற்றாக்குறை எனக்கூறி கர்நாடக அரசு காவிரியில் உரிய அளவு தண்ணீரை திறந்து விடவில்லை. இதைதொடர்ந்து, கடந்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தவறாமல் அமல்படுத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
அதில், ‘காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை பின்பற்ற கர்நாடகா தவறிவிட்டது. குறிப்பாக தமிழகத்துக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் நீர் திறக்க கர்நாடகா மறுத்தால் காவிரி டெல்டா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
எனவே, தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ல் காவிரி நீர் விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவு ஆகியவற்றை எந்த வகையிலும் தவறாமல் கடைபிடிக்க கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலகட்டத்திற்கான நீர் பாக்கியை உடனடியாக விடுவிக்க கர்நாடகவுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட நீர் வெளியேற்றத்தை உறுதிசெய்யும் வகையில், கர்நாடகா அணைகளின் நீர்வரத்தை 10 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து, கர்நாடகாவிற்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்’ என்று தமிழக அரசு தனது மனுவில் கோரியிருந்தது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் முன்பு ஆஜராகி முறையிட்டார். குறிப்பாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரில் 22.75 டி.எம்.சி தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, காவிரி நீர் விவகாரம் தொடர்பான தமிழக அரசின் மனு மற்றும் அது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு உள்ள பிற மனுக்களையும் வரும் 13-ம் தேதி விசாரணைக்கு எடுப்பதாக உறுதி அளித்தார்.