மலப்புரம்: இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளதாக கேரளாவை சேர்ந்த மதத்தலைவர் சயீத் இப்ராஹீம் கலீல் அல் புகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த அவர், மதீன் அகாடமியின் நிறுவனத் தலைவராக உள்ளார். கேரள மாநிலத்தின் முஸ்லீம் ஜமாத்தின் பொதுச் செயலாளராகவும் அவர் உள்ளார். இந்த சூழலில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
“இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பாதுகாப்பாக உள்ளனரா அல்லது சிரமத்துக்கு ஆளாகி உள்ளனரா என்ற பொதுவான கேள்வி உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் கேட்பது உண்டு. வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், அங்குள்ளவர்கள் இந்தியாவில் நிலவும் சூழல் குறித்து கேட்பது உண்டு.
அனைத்து இடத்திலும் கொடுக்கின்ற பதில் ஒன்றுதான். அது என்னவென்றால் ‘இந்தியா, ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாடு’. அதன் குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் நீதியை உத்தரவாதம் செய்யும் அரசியலமைப்புச் சட்டம் உள்ளது. நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவை செய்யும் வலுவான நீதி அமைப்பு உள்ளது. எனவே இந்தியாவில் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உறுதியாக நம்புகிறோம் என்பதுதான்” என அவர் தெரிவித்துள்ளார்.