பாட்னா: பிஹார் மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமையவுள்ளது. பாஜக துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி இன்று புதிய முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இதையடுத்து மாநில முதல்வராக நிதிஷ்குமார் 10-வது முறையாகப் பொறுப்பேற்றார். இந்நிலையில், பிஹாரில் கடந்த மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட்டு முதல்வர் நிதிஷ்குமார் எம்.பி.யானார். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிஹார் பாஜக எம்எல்ஏ.க்களின் கூட்டம் பாட்னாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிதிஷ்குமார் வாழ்த்து தெரிவித்தார்.
பிஹார் மாநில புதிய முதல்வராக சாம்ராட் சவுத்ரி இன்று ஏப்.15-ம் தேதி பதவியேற்க உள்ளார். இதன்மூலம் பிஹார் மாநிலத்தில் முதல் முறையாக பாஜக.வைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில் ஆளுநர் சையத் அடா ஹஸ்னைனைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் சாம்ராட் சவுத்ரி. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களையும் ஆளுநரிடம் சாம்ராட் வழங்கினார். முன்னதாக முதல்வர் நிதிஷ்குமார் நேற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.