புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி அளித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்பு ஏப்.7-ம் தேதி தொடங்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மறு ஆய்வு மனுக்கள் மீதான எழுத்துப்பூர்வவாதங்களை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வயது வித்தியாசமின்றி அனைத்து பெண்களும் சென்று வழிபட அனுமதி அளித்து கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து, மத்திய அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் இருந்து 66 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜோய்மால்யா பக்சி அமர்வு முன்பு இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தன.
மறுஆய்வு மனுக்களைப் பரிசீலித்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி அளித்து வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்த மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு முன்பு ஏப்.7-ம் தேதி தொடங்க உள்ளது.
ஏப்.22-ல் விசாரணை முடிவடையும்: ஏப்.7, 8-ம் தேதிகளில் தீர்ப்பை எதிர்க்கும் தரப்பினரின் வாதங்களும், ஏப்ரல் 14, 16-ம் தேதிகளில் தீர்ப்புக்கு ஆதரவான மனுதாரர்களின் வாதங்களும் கேட்கப்படும். பின்னர் இரு தரப்பிலும் விளக்க வாதங்கள் ஏப்.21-ம் தேதி கேட்கப்பட்டு, 22-ம் தேதி விசாரணை நிறைவடையும்.
ஒருங்கிணைப்பு வழக்கறிஞர்களாக மறுஆய்வு மனுதாரர்கள் சார்பில் கிருஷ்ணகுமார் சிங்கும், மறுஆய்வு மனுக்களை எதிர்ப்போர் தரப்பில் ஷாஷ்வதி பரியும் நியமிக்கப்படுகின்றனர்.
மறுஆய்வு மனுக்கள் மீதான எழுத்துப்பூர்வ வாதங்களை மார்ச் 14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்கறிஞர்கள் கே.பரமேஷ்வர், சிவம் சிங் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.