கொல்லம்: சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கம் மாயமான விவகாரத்தில் அறிவியல்பூர்வ அறிக்கையை நீதிமன்றம் எஸ்ஐடி-யிடம் ஒப்படைத்துள்ளது.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் இந்த அறிவியல் ஆய்வை மேற்கொண்டது. இந்த அறிக்கை ஒரு சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் இந்த அறிக்கையை, சபரிமலை தங்க இழப்பு வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் ஒப்படைத்துள்ளது.
2019-ம் ஆண்டு முதன்மை குற்றவாளியான உண்ணிகிருஷ்ணன் போற்றி என்பவர், புனரமைப்புப் பணிகளுக்காகக் கொண்டு சென்ற செப்புத் தகடுகளில் இருந்த தங்கத்தின் தன்மையை, அதற்கு முன்பும் பின்பும் ஒப்பிட்டுப் பார்க்க இந்த அறிவியல் ஆய்வுக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோயில் (கருவறை) கதவு சட்டங்களில் இருந்து தங்கம் காணாமல் போனது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த இரண்டு வழக்குகளிலும் இதுவரை முதன்மை குற்றவாளி உண்ணிகிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் முன்னாள் தலைவர்கள் இருவர் உட்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.