திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வடக்காஞ்சேரி பஞ்சாயத்து தேர்தலில் ஒரு தரப்புக்கு ஆதரவாக வாக்களிக்க சுயேச்சை உறுப்பினருக்கு ரூ.50 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு பிரிவு விசாரணையை தொடங்கியுள்ளது.
வடக்காஞ்சேரி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் யுடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய இரு கூட்டணியும் தலா ஏழு இடங்களைப் பெற்று சமநிலையில் இருந்தது. இந்த சூழ்நிலையில், சுயேச்சை உறுப்பினரின் வாக்குக்கு மிகுந்த முக்கியத்துவம் ஏற்பட்டது.
இதையடுத்து, முஸ்லிம் லீக் ஆதரவு பெற்ற சுயேச்சை உறுப்பினர் இ.யு. ஜாஃபர், அந்த தேர்தலில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க தனக்கு ரூ.50 லட்சம் வழங்கப்பட்டதாகக் கூறும் ஆடியோ இணையத்தில் வேகமாக பரவியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தற்போது ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.