தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்
புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்துக்கான நோட்டீஸ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த இந்த நோட்டீஸில் மக்களவையின் 130 எம்பிக்கள், மாநிலங்களவையின் 63 எம்பிக்கள் கையெழுத்திட்டு இருந்தனர். இந்த சூழலில் மக்களவை, மாநிலங்களவையில் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து மக்களவை செயலாளர் உப்தல் குமார் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக் கோரி கடந்த மார்ச் 12ம் தேதி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இந்த நோட்டீஸை மக்களவைத் தலைவர் (ஓம் பிர்லா) ஆய்வு செய்தார்.
தீவிர பரிசீலனைக்குப் பிறகு நோட்டீஸை ஏற்க மக்களவைத் தலைவர் மறுத்துவிட்டார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல மாநிலங்களவைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணனும் நோட்டீஸை ஏற்க மறுத்துவிட்டார்.