புதுடெல்லி: க்ரோக் ஆபாச பட விவகாரத்தில் எக்ஸ் சமூக வலைதளத்தில் இருந்து 3,500 பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. 600 கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன.
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரிமியம் மற்றும் பிரிமியம் பிளஸ் சந்தாதாரர்களுக்கு க்ரோக் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) வசதி வழங்கப்படுகிறது. சிலர் எக்ஸ் தளத்தில் போலி கணக்குகளை உருவாக்கி க்ரோக் ஏஐ மூலம் பிரபலங்கள், பெண்கள், சிறார்களின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி வெளியிடுவதாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் தலைமை பொறுப்பு அதிகாரிக்கு, மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை கடந்த 2-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில், “க்ரோக் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச படங்கள், வீடியோக்களை 72 மணி நேரத்தில் நீக்க வேண்டும். இந்திய சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். இதுதொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து எக்ஸ் சமூக வலைதளம் சார்பில் மத்திய மின்னணு, தகவல் தொழில் நுட்ப துறையிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “எக்ஸ் சமூக வலைதள நிர்வாகம் தனது தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கிறது.
இந்திய சட்ட விதிகளை மதித்து நடக்க அந்த நிர்வாகம் உறுதி அளித்திருக்கிறது. க்ரோக் ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட 3,500 ஆபாச பதிவுகள் நீக்கப்பட்டு உள்ளன. இந்த பதிவுகளை வெளியிட்ட 600 எக்ஸ் தள கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன” என்று தெரிவித்தன. இந்தியா மட்டுமன்றி பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் க்ரோக் ஏஐ தொழில் நுட்பம் தொடர்பாக ஆட்சேபங்களை எழுப்பி உள்ளன.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளம் வெளியிட்ட பதிவில், “க்ரோக் ஏஐ மூலம் ஆபாச படங்களை உருவாக்கி வெளியிட்டால் சம்பந்தப்பட்ட எக்ஸ் சமூக வலைதள கணக்குகள் நிரந்தரமாக முடக்கி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.