மும்பை: அந்நியச் செலாவணியை பாதுகாக்க ரூ.1.15 லட்சம் கோடி மதிப்புள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்திருக்கலாம் என வெளியான செய்தியை அது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கையிருப்பு தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்றதாக சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையல்ல என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்திக் கூறுகிறது. தங்கத்தின் இருப்பு குறித்த விவரங்கள் ரிசர்வ் வங்கியின் மாதாந்திர செய்தி அறிக்கையில் வெளியிடப்படுகின்றன. அந்த செய்தி அறிக்கையை என்ற https://www.rbi.org.in/Scripts/BS_ViewBulletin.aspx?Id=24213 இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.
இன்றைய நிலவரப்படி தங்கத்தின் இருப்பு 880.52 டன்களாக மாறாமல் நீடிக்கிறது. எனவே இதுபோன்ற விஷயங்களில் ரிசர்வ் வங்கி அவ்வப்போது வெளியிடும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னணி: உலகின் மூன்றாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி நாடாக இந்தியா விளங்குகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் போக்கு காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருகிறது. எரிபொருள் விலையேற்றம் மற்றும் உள்நாட்டு நாணய மதிப்பின் வீழ்ச்சி ஆகியவை இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புக்கு பெரும் சவாலாக மாறியுள்ளன.
இந்நிலையில், அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் குறைத்து, பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் விலையேற்றம் மற்றும் விலை மதிப்புள்ள உலோகங்கள் மீதான இறக்குமதி வரி கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கையிருப்பு தங்கத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி விற்பனை செய்திருக்கலாம் என புளூம்பெர்க் எகனாமிக்ஸ் அமைப்பின் மூத்த இந்தியப் பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தா குறிப்பிட்டிருந்தார். “மே 22-ம் தேதியுடன் முடிவடைந்த 2 வாரங்களில், ரிசர்வ் வங்கி சுமார் 1,200 கோடி டாலர் மதிப்புள்ள தங்கத்தை விற்பனை செய்திருக்கலாம். இதன் மூலம், ரிசர்வ் வங்கி தனது அந்நியச் செலாவணி சொத்து மதிப்பில் சுமார் 750 கோடி வரை சேர்த்திருக்கலாம்” என்று அபிஷேக் குப்தா கூறி இருந்தார். இது குறித்த செய்தி பரவலாக செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்களில் வெளியாகின. இந்நிலையில், இதனை ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.