புதுடெல்லி: ராமேஸ்வரத்துக்கும், இலங்கையில் உள்ள தலைமன்னாருக்கும் இடையே ராமர் பாலம் இருந்ததாக நம்பப்படுகிறது. இதை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுதொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி புதிய மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உரிய உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தார். அந்த மனுவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, “இந்த வழக்கில் மனுதாரர் சுப்பிரமணியன் சுவாமி தானே ஆஜராகி வாதிடுவதாக இருந்தது, அவருக்கு தற்போது உடல்நிலை சரியில்லாததால் நீதிமன்றம் வர இயலவில்லை. எனவே வழக்கை ஒத்திவைக்க வேண்டும்” என்றார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தனர்.