புதுடெல்லி: எல் நினோ பாதிப்பால் இந்தியாவில் ஜூலை மாதத்தில் வழக்கத்தைவிட மழை அளவு குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் தீவிர ‘எல் நினோ’ ஏற்படும் என வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதன்படி, பசிபிக் பெருங்கடலில் ‘எல் நினோ' காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் 12 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி நிலவியது. இந்த மாதத்தில் வழக்கத்தைவிட 40% குறைவாக மழை பெய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தென்மேற்கு பருவமழையின் முக்கிய மாதமான ஜூலையிலும் வழக்கத்தை விடக் குறைவான மழையே பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை மாத மழைப்பொழிவு அதன் நீண்டகால சராசரியான 28 செ.மீ-ல் 94%-க்கும் குறைவாகவே இருக்கும் என ஐஎம்டி இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் சரிந்து நாட்டின் விவசாய உற்பத்தி பெருமளவில் பாதிக்கலாம். ஜூலை மாதம் நெல், சோயா பீன்ஸ், பருத்தி மற்றும் பருப்பு வகைகளை பயிரிடும் முக்கிய காலமாகும். ஜூன் 25 நிலவரப்படி, பயிர் சாகுபடி பரப்பு கடந்த ஆண்டைவிட 23% சரிந்துள்ளது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட 12 மாநிலங்களில் உள்ள 315 மாவட்டங்கள் இதனால் பாதிக்கப்படலாம் என கண்டறியப்பட்டு, அவசரக்கால திட்டங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
மழைப்பொழிவு குறைவதால் அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும், எண்ணெய் வித்துக்கள் மற்றும் காய்கறிகளின் விலை உயரும் அபாயம் உள்ளது. மேலும், மழை பற்றாக்குறையால் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத்துக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்துக்கும், மின் விநியோகத்துக்கும் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
பருவமழை பற்றாக்குறையானது நாட்டின் பொருளாதாரத்துக்கு கவலை அளிக்கும் விஷயம் என மத்திய நிதி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘வரும் ஆண்டுகளில் இந்தியா எவற்றுக்கெல்லாம் பாதுகாப்பு வளையங்களை உருவாக்க வேண்டுமோ, அந்தப் பட்டியலில் தண்ணீர் முதலிடத்தில் இருக்கக்கூடும்' என்று நிதியமைச்சகம் தனது ஜூன் மாத பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.