டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவில்லத்தில், ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
புதுடெல்லி: ‘‘அமைதி, நீதி, சுதந்திரத்துக்காக அதிகபட்ச தியாகங்கள் செய்த மகாத்மா காந்தி, இந்தியாவின் அழியாத ஆன்மா’’ என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அமைதி, நீதி, சுதந்திரத்துக்காக அவர் முழுமையாக தியாகங்கள் செய்தவர். அவர் இந்தியாவின் அழியாத ஆன்மா.
இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததோடு, அதிகாரத்தை விட நாட்டில் உண்மைதான் மேலானது என்ற அடிப்படை கொள்கையைக் கொடுத்தவர். அவர் சாதாரண மனிதர் அல்லர். அவர் ஒரு சாம்ராஜ்ஜியம். வெறுப்புணர்வை எதிர்த்தவர். பயம், வன்முறையை விட அகிம்சையும் துணிவும் மிகப்பெரியவை என்று வாழ்ந்து காட்டியவர். இந்த சிந்தனை, கொள்கை என்றும் அழியாதது. அதனால்தான் மகாத்மா காந்தி இந்த நாட்டின் அழியாத ஆன்மாவாக இருக்கிறார். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவில்லத்தில், ராகுல் காந்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.