புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் கூறியிருப்பதாவது:
ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளிய கல்வி அமைப்பின் தோல்வியே உண்மையான பிரச்சினை ஆகும். மாறாக போராட்டக்காரர்களின் நடத்தை அல்ல.
ஒரு பெற்றோர் தனது குழந்தையை இழந்து துன்பப்படுவதை பார்ப்பதை விட வேதனையானது வேறெதுவும் இல்லை. பறிபோன ஒவ்வொரு இளம் உயிருக்கும் பின்னால், ஒருபோதும் நீங்காத துயரத்தை சுமக்கும் ஒரு குடும்பமும், சீர்குலைந்த கல்வி முறை குறித்த தீவிரமான கேள்விகளும் உள்ளன.
வினாத்தாள் கசிவு, தேர்வுகள் ரத்து போன்ற குளறுபடிகளால் பல ஆண்டுகால உழைப்பு ஒரே இரவில் வீணாகிறது. தங்களுக்கு நேர்மையாக நடந்துகொள்ளாத ஒரு அமைப்பில், நேர்மையாக செயல்படுமாறு நம் மாணவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மாணவர்களை ‘மன்னிப்பது’ பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு துணிச்சல் இருக்கிறது. துயரத்தில் இருக்கும் எந்தவொரு பெற்றோரையோ அல்லது வினாத்தாள் கசிவால் எதிர்காலத்தை இழந்த எந்தவொரு மாணவரையோ அவர் சந்திக்கவில்லை.இந்திய மாணவர்களுக்கு அவருடைய மன்னிப்பு தேவையில்லை. பிரதமர் மன்னிப்பு கோருவதே மாணவர்களுக்கு தேவை. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.