அமராவதி: ஆந்திர தலைநகர் அமராவதியில் குவாண்டம் தொழில்நுட்ப மையத்துக்காக ரூ.1,002.49 கோடி செலவில் கட்டிடங்கள் கட்ட மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கிஉள்ளது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 34 அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக ஆந்திர தலைநகர் அமராவதியில் குவாண்டம் தொழில்நுட்ப மையத்துக்காக ரூ.1,002.49 கோடி செலவில் 36 மாடிகள் கொண்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் எல் அண்ட் டி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்புக்கு கடந்த ஜெகன் அரசில் திசா-2019 சட்டம் இயற்றப்பட்டது. இதனை ரத்து செய்துவிட்டு, பெண்களுக்கான புதிய பாதுகாப்பு சட்ட மசோதா இயற்ற அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நகராட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான வாடகை இடங்களுக்கு கால அவகாசம் நீடிக்கப்பட்டது. 2 புதிய தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
புதிய மாவட்டங்களுக்கு 15 புதிய மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. புதிய சட்டப்பேரவை, உயர் நீதிமன்றம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. `அமராவதி ஐ' திட்டத்துக்கு மறு டெண்டர் வெளியிட தீர்மானிக்கப்பட்டது.