புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள பிம்ப்ரி - சின்ச்வத் பகுதியில் மாநகராட்சியின் குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படாத திடக் கழிவு பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் அருகே கழிவை எரிபொருளாக்கும் திட்டத்தின் மாநகராட்சி அலுவலகம் உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் குப்பை கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருந்த திடக் கழிவு பொருட்கள் சரிந்து அருகில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தின் மேல் விழுந்துள்ளது. இதில் கட்டிடம் நிலைகுலைந்து தரைமட்டமானது.
அப்போது மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 20 பேர் இருந்துள்ளனர். இவர்களில் 10 பேர் தப்பி வெளியேறிவிட்டனர். இடிபாடுகள் இடையே 10 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்தார்.