பனாஜி: கோவாவில் ரவுடி ஜாமினில் விடுதலையானதை அடுத்து நடந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற சிறை வார்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கோவா மாநிலத்தின் தெற்கு பகுதியில் கடந்த ஆண்டு இரு ரவுடி கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட அமோக் நாயக் பனாஜியில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருக்கு உள்ளூர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது.
இந்த சூழ்நிலையில், ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டது. அதில், மத்திய சிறையிலிருந்து அமோக் நாயக் வெளியே வந்தபோது, அவர் மீது மதுவை பீய்ச்சியடித்தும் பட்டாசு வெடித்தும் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அங்கு எடுக்கப்பட்ட குழு புகைப்படத்தில், சிறை வார்டன் லட்சுமண் பட்லோஸ்கரின் தோளில் கையைப் போட்டபடி நாயக் போஸ் கொடுத்துள்ளார்.
இந்த தகவலை அறிந்த சிறைத் துறை, வார்டன் பட்லோஸ்கரை நேற்று சஸ்பெண்ட் செய்தது. இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள காவல் கண்காணிப்பாளர் (சிறைகள்) சுசேதா தேசாய், அவரிடம் விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.
வடக்கு கோவாவில் அமைந்துள்ள கோல்வேல் மத்திய சிறைச்சாலைக்குள் செல்போன்கள் மற்றும் கடத்தல் பொருட்கள் கிடைப்பது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு கவலை தெரிவித்த 2 நாட்களுக்குப் பிறகு, சிறை வார்டன் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.