புதுடெல்லி: தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் உரிய தெளிவுரை வழங்கக் கோரி பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் நீண்ட கடிதம் ஒன்றை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் விஜய் இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது அவரிடம் முதல்வர் விஜய் கடிதம் அளித்தார். அதன் விவரம்:
சில அரசு விழாக்களின் போது தேசியப் பாடலைப் பாடுவது தொடர்பான, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 28.01.2026 நாளிட்ட ஆணை எண்: 14/2/2025- Public குறித்து கனிவான கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.
தமிழக அரசும், தமிழக மக்களும் நாட்டுப்பண் மற்றும் தேசியப் பாடலுக்கு மிக உயரிய மரியாதையை அளித்து வருகின்றனர். அனைத்து தேசியச் சின்னங்களுக்கும் உரிய கண்ணியத்தையும், நன்மதிப்பையும் தமிழகம் தொடர்ந்து அளித்து வருவதுடன், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் திகழ்கிறது.
மேலும், தமிழகத்தில், ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 1891-ஆம் ஆண்டில் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு வாழ்த்துப் பாடலாகும்.
கடந்த பல்லாண்டுகளாக தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு, கல்வி, பண்பாடு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இப்பாடல் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழகத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு முறையாக அறிவித்துள்ளது.
மேற்சொன்ன உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தொடர்ந்து, வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைமுறையை மக்கள் மாளிகை பின்பற்றி வருகிறது. நாட்டுப்பண் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் இந்த வரிசைமுறை, மாநிலத்தில் நீண்டகாலமாக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக அமைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்மொழிப் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலத்தின் வாழ்த்துப் பாடலாகத் தமிழகத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் மேற்படி ஆணையைத் தொடர்ந்து இந்த நடைமுறை சில குறிப்பிட்ட அரசு விழாக்களில் மாற்றப்பட்டுள்ளது. உள்துறை
அமைச்சகத்தின் ஆணையில் மாநில வாழ்த்துப் பாடலை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடுவதற்கு யாதொரு தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் மக்கள் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அத்தகைய தெளிவுரை, உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணக்கமாக மாற்றுவதுடன், நிர்வாக ரீதியிலான குழப்பங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாகவும் அமையும். இவ்விவகாரத்தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்ய வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.