தாரிக் ரஹ்மான் | மோடி
புதுடெல்லி: வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘தாரிக் ரஹ்மானுடன் பேசியதில் மகிழ்ச்சி. வங்கதேசத் தேரதலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.
வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அவரது முயற்சிக்கு எனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டேன்.
ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்ட இரண்டு நெருங்கிய அண்டை நாடுகள் என்ற வகையில், இரு நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றம், செழிப்புக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வங்கதேச தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியை நோக்கி மக்களை அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
ஜனநாயக, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய வாங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு வங்கதேச தேசிய கட்சி நன்றி தெரிவித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் 2026 தேர்தலுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் கான், ‘‘எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானை வாழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ஒரு ஜனநாயக நாடு, மக்களின் தீர்ப்பை அங்கீகரித்திருப்பது மிகவும் நல்லது. நரேந்திர மோடி இதைச் செய்துள்ளார். அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள்: வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 60.26% வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 299 இடங்களில், 2 இடங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 297 இடங்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி, வங்கதேச தேசியவாத கட்சி 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்சிபி 6, வங்கதேச ஜாதியா கட்சி 1, இஸ்லாமி அந்தோலன் பங்களாதேஷ் 1, சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைய மூத்த செயலாளர் அக்தார் அஹ்மது இதனை தெரிவித்தார்.