இந்தூர்: இந்தூரில் அசுத்தமான குடிநீர் அருந்தி 14 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, “ஏழைகள் இறக்கும்போதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி மவுனமாக இருக்கிறார்” என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தூரில் விநியோகிக்கப்பட்டது தண்ணீர் அல்ல, விஷம். ஆனால் அரசு நிர்வாகம் இந்த விவகாரத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் துக்கம் சூழ்ந்துள்ளது. ஏழைகள் உதவியற்ற நிலையில் உள்ளனர். அதற்கும் மேலாக, பாஜக தலைவர்கள் ஆணவமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். தங்கள் உயிரையும், வாழ்வாதாரத்தையும் இழந்தவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது; அரசாங்கமோ ஆணவத்தை வழங்கியது.
அசுத்தமான, துர்நாற்றம் வீசும் தண்ணீர் குறித்து மக்கள் மீண்டும் மீண்டும் புகார் செய்தபோதும், அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் எவ்வாறு கலந்தது? சரியான நேரத்தில் கழிவுநீர் விநியோகம் ஏன் நிறுத்தப்படவில்லை? இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
இவை அற்பமான கேள்விகள் அல்ல, இவை பொறுப்புக்கூறலைக் கோருகின்றன. சுத்தமான நீர் என்பது ஒரு சலுகை அல்ல, அது வாழ்வதற்கான உரிமை. இந்த உரிமையை அழித்ததற்கு பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம், அதன் அலட்சியமான நிர்வாகம் மற்றும் உணர்வற்ற தலைமை மட்டுமே முழுப் பொறுப்பு.
மத்தியப் பிரதேசம் இப்போது மோசமான ஆட்சியின் மையமாக மாறிவிட்டது. இருமல் மருந்துகளால் ஏற்படும் மரணங்கள், அரசு மருத்துவமனைகளில் எலிகள் குழந்தைகளைக் கொல்வது, இப்போது கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்ததால் ஏற்படும் மரணங்கள். ஆனால், ஏழைகள் இறக்கும்போதெல்லாம், பிரதமர் மோடி வழக்கம் போல் மவுனமாக இருக்கிறார்" என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்தூரில் நடந்தது என்ன? - மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள பாகீரத்புரா பகுதியில் ஒரு பொதுக் கழிப்பறைக்கு அடியில் சென்ற குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டதில் குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளது. இந்த தண்ணீரை குடித்த பலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தியாவின் தூய்மையான நகரமாக இந்தூர் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில், அங்கு நடைபெற்ற இந்தச் சம்பவம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியது.
இது குறித்து மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் இரண்டு, மூன்று நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40,000-க்கு மேற்பட்டோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்தத் துயர சம்பவத்தில் 6 மாத குழந்தை உட்பட இதுவரை 14 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில், பாகீரத்புராவில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு சரிசெய்யப்பட்டு குடிநீர் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.