குவாஹாட்டி: அசாமில் ரூ.6,957 கோடி மதிப்பிலான காசிரங்கா உயர்மட்ட வழித்தட திட்டத்துக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் 2 அம்ரித் பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாலை அசாம் மாநிலம் குவாஹாட்டி சென்றார். கின்னஸ் சாதனைக்காக போடோ பழங்குடியின கலைஞர்கள் 10,000 பேர் பங்கேற்ற பகுரும்பா நடன நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
குவாஹாட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கிய பிரதமர் மோடி, நேற்று காலையில் நகோன் மாவட்டம், கலியாபோர் சென்றார். அங்கு ரூ.6,957 கோடி மதிப்பில் அமையவுள்ள காசிரங்கா உயர்மட்ட வழித்தட திட்டத்துக்கு பூமிபூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காசிரங்கா தேசிய பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளின் பாதுகாப்பான நடமாட்டத்தை உறுதி செய்யவும், தேசிய நெடுஞ்சாலை - 715ல் ஏற்படும் சாலை விபத்துகளைக் குறைக்கவும், சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த வழித்தடம் உதவும். அதே வேளையில், இது உள்ளூர் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்” என்றார்.
மேலும் திப்ரூகர் - கோமதி நகர் (லக்னோ) மற்றும் காமக்யா - ரோத்தக் ஆகிய 2 வழித்தடங்களில் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அசாமில் பல தசாப் தங்களாக நீடித்த காங்கிரஸ் ஆட்சியில் ஊடுருவல் அதிகரித்து வந்தது. சட்ட விரோதமாக குடியேறியவர்கள் காடுகள், வனவிலங்கு வழித் தடங்கள். பாரம்பரிய நிறுவனங்களை ஆக்கிரமித்துள்ளனர். நிலத்தை ஆக்கிரமித்த ஊடுருவல்காரர்களை வெளியேற்றுவதன் மூலம், பாஜக அரசு அசாமின் அடையாளம், கலாச்சாரத்தை பாதுகாத்து வருகிறது, நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்காக வாக்காளர்கள் பாஜகவை நம்புகிறார்கள்.
பிஹாரில் 20 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சியில் இருந்த போதும் பாஜக கூட்டணிக்கு மக்கள் அமோக வெற்றியைக் கொடுத்துள்ளனர். மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர், கேரளாவிலும் கூட இப்போது பாஜகவைச் சேர்ந்த ஒருவர் மேயராகி உள்ளார்.
சூழலியலும் பொருளாதாரமும் இணைந்து முன்னேற முடியும் என்பதை இந்தியா உலகுக்குக் காட்டியுள்ளது. அசாமின் வளர்ச்சி ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தரும். ‘கிழக்கு நோக்கிச் செயல்படும் கொள்கை’ இப்பகுதியை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும். அசாமில் தொடங்கப்பட்ட திட்டங்கள் பாஜகவின் வளர்ச்சி மந்திரத்தை வலுப்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.