புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
தலைநகர் டெல்லியில் சிவப்பு, மஞ்சள், நீலம், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு (பிங்க்), மெஜந்தா உள்ளிட்ட பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட வழித் தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் பிங்க் மற்றும் மெஜந்தா வழித் தடங்கள் இணைக்கப்பட்டு நாட்டின் முதல் வட்ட மெட்ரோ பாதை (ரிங் மெட்ரோ) அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி பிங்க் வழித்தடத்தில் 12.3 கி.மீ. நீள மஜ்லிஸ் பார்க் - உஜ்பூர் - பாபர்பூர் பாதை, மெஜந்தா வழித் தடத்தில் 9.9 கி.மீ. நீள தீபாளி சவுக் - மஜ்லிஸ் பார்க் பாதையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 3 புதிய மெட்ரோ வழித் தடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
டெல்லி சரோஜினி நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ஊழியர்களுக்காக ரூ.15,200 கோடி மதிப்பில் 9,350 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளின் சாவிகளை பயனாளிகளிடம் பிரதமர் மோடி வழங்கினார். ஒட்டுமொத்தமாக ரூ.33,500 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார், சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
டெல்லி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: இந்திய பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல், ஆட்சி நிர்வாகம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை என அனைத்து துறைகளிலும் இந்தியப் பெண்கள் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனர். டெல்லியை சர்வதேச நகரமாக உருவாக்க வேண்டும். இதற்காக டெல்லியின் உள்கட்டமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ சேவை, 375 கி.மீ. ஆக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. தற்போது நாட்டின் முதல் ரிங் மெட்ரோ சேவை தொடங்கப்பட்டிருக்கிறது. டெல்லியில் நமோ பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டெல்லியில் 1,800 மின்சார பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டன. டெல்லி சுற்றுவட்ட சாலையால் போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது. யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இரட்டை இன்ஜின் அரசால் டெல்லியில் வளர்ச்சி திட்டப் பணிகள் விரைவு பெற்றுள்ளன.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் நாடு முழுவதும் ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் பலன் அடைந்து வருகின்றனர். சுமார் 2 லட்சம் நடைபாதை வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 10 கோடி பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அமல் செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 3 கோடி லட்சாதிபதி பெண்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறோம். நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மே.வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: டெல்லி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் நடந்த பழங்குடியினர் மாநாட்டில் பங்கேற்க சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அம்மாநில அரசு அவமதித்து உள்ளது. இதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பெண்களும் அவமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் ஆணவத்துடன் செயல்படுகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். மேற்கு வங்கத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.