புதுடெல்லி: பாஜகவின் 12-வது தேசிய தலைவராக நிதின் நபின் நேற்று பொறுப்பேற்றார். கட்சி விவகாரங்களில் அவரே தனது தலைவர் என அறிவித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பாஜகவின் புதிய தேசிய தலைவர் பதவிக்கான தேர்தல் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்சியின் செயல் தலைவர் நிதின் நபின் சார்பில் மட்டும் 37 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது. இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் தேர்தல் முடிவுகளை கட்சியின் தேர்தல் அதிகாரி கே.லட்சுமன் நேற்று வெளியிட்டார்.
இதில் பாஜக தேசிய தலைவராக நிதின் நபின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் முறைப்படி அறிவித்தார். இதற்கான சான்றிதழை அவர் நிதின் நபினிடம் வழங்கினார். 45 வயதாகும் நிதின் நபின், பாஜக தேசிய தலைவர் பதவியை இளம் வயதில் அடைந்த முதல் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு சிஆர்பிஎப் சார்பில் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நம் அனைவருக்கும் இப்போது நிதின் நபின் தலைவர். அவருடைய பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, என்டிஏ கூட்டணிக் கட்சிகளுக்கு இடையில் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதும் ஆகும். கட்சி விவகாரங்களில் நிதின் நபின் எனது தலைவர், நான் ஒரு தொண்டர்.
அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் தலைமையில், பாஜக பூஜ்ஜியத்தில் இருந்து உச்சிக்கான பயணத்தை கண்டது. இந்த நூற்றாண்டில், எம்.வெங்கய்ய நாயுடு, நிதின் கட்கரி போன்ற தலைவர்கள், நமது மூத்த சகாக்களுடன் இணைந்து கட்சியை விரிவுபடுத்தினர். ராஜ்நாத் சிங் தலைமையில், முதல் முறையாக பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
பிறகு அமித் ஷா தலைமையில், பாஜக பல மாநிலங்களில் அரசு அமைத்ததுடன், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஜே.பி.நட்டாவின் தலைமையில், பாஜக பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மேலும் வலுப்பெற்றது. இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து பாஜகவின் 12-வது தேசிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது நிதின் நபினுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: பாஜக தலைவராக பதவியேற்ற நிதின் நபின் பேசியதாவது: இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத்தை நிறைவேற்றிட மக்கள், குறிப்பாக இளைஞர்கள் அரசியலில் நுழைய வேண்டும். கட்சியில் ஒவ்வொருவரின் பணிகளையும் கவனிக்கும் அளவுக்கு பாஜகவின் கண்காணிப்பு அமைப்பு வலிமையானது.
கட்சித் தொண்டர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். மக்கள் தொகை மாற்றங்களில் இருந்து நாட்டை காக்கவும் சனாதன மரபுகள், நம்பிக்கையை பாதுகாக்கவும் மே.வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை தொண்டர்கள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.