புதுடெல்லி: அசாம் மாநிலம் கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் வன்முறையிலிருந்து அமைதி பாதைக்கு மாறியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ‘எனது வாக்குச்சாவடியே வலிமையானது’ என்ற பிரச்சாரத்தின் கீழ் அசாம் மாநில பாஜக வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது: அசாம் மாநிலம் நீண்ட காலமாக ஸ்திரமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில் பாஜகவின் ‘இரட்டை இன்ஜின்’ அரசு மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளால் அமைதி பாதைக்கு திரும்பியுள்ளது.
மத்தியிலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு அமைப்புகளுடன் 12 அமைதி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வெறும் காகித அளவில் மட்டுமே ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை வெறும் செய்திகளுக்காகவும், மக்களை திசைதிருப்புவதற்காகவுமே பயன்படுத்தப்பட்டன.
அசாம் மாநிலம் வன்முறையில் தத்தளித்த காலத்தை நாம் பார்த்திருக்கிறோம். காங்கிரஸ் ஆட்சியில் இளைஞர்கள் அமைதியற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டனர்.
போடோ இன மக்களின் கோரிக்கைகளை காங்கிரஸ் அரசு வஞ்சித்தது. ஆனால், இன்று அசாம் புதிய தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது. அமைதி ஒப்பந்தங்களை நாங்கள் அடிப்படையில் இருந்து மிகத் துல்லியமாகச் செயல்படுத்தி வருகிறோம்.
பாஜகவின் மற்றுமொரு வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைத்து வருகிறீர்கள். உங்களைப் போலவே நானும் கட்சியின் தொண்டன்தான். எனக்கு அளிக்கப்படும் பொறுப்புகளை நான் செவ்வனே செய்து வருகிறேன்.
முதல்முறை வாக்களிக்கும் இளைஞர்களுக்கு, காங்கிரஸின் முந்தைய தவறான ஆட்சி குறித்து எடுத்துரைக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய தவறு கூட மாநிலத்தை மீண்டும் பழைய நிலைக்குத் தள்ளிவிடும். இதனை அவர்களுக்கு முறையாக எச்சரித்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அசாமில் உள்ள 126 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 9-ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.