டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டியளித்த பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா. படம்: பிடிஐ
புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா, பிரேசில் இருதரப்பு வர்த்தகத்தை ரூ.1.81 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுாலா டா சில்வாவுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சில்வாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது மற்றும் சர்வதேச அரசியல் நிலவரம் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், டிஜிட்டல், அரிய வகை கனிமங்கள் மற்றும் ஸ்டீல் விநியோகம் ஆகிய 3 துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த சந்திப்புக்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: அதிபர் லுாலாவின் தொலை நோக்குப் பார்வை மற்றும் ஊக்கமளிக்கும் தலைமையால் இந்தியா மற்றும் பிரேசில் இடையிலான உறவு நீண்டகாலமாகப் பயனடைந்துள்ளது. மேலும், லத்தீன் அமெரிக்காவில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக பிரேசில் விளங்குகிறது.
இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கும் மேலாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். குறிப்பாக, அரிய வகை கனிமங்கள் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் இணைந்து செயல்டுவது குறித்து ஆலோசித்தோம்.
தீவிரவாத அமைப்புகளும், அவற்றுக்கு ஆதரவு அளிப்பவர்களும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் எதிரிகள் என்பதில் இரு நாடுகளும் ஒரே கருத்தைக் கொண்டுள்ளன. எனவே, அவற்றுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்று முடிவு எடுத்துள்ளோம்.
இந்தியா மற்றும் பிரேசில் இணைந்து செயல்படும்போது, ‘குளோபல் சவுத்' எனப்படும் வளரும் நாடுகளின் குரல் உலக அரங்கில் வலுவடையும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இரு சக்திகளின் சந்திப்பு: பிரேசில் அதிபர் சில்வா கூறும்போது, “எனது அன்பிற்குரிய நண்பர் மோடி அவர்களே, 6-வது முறையாக இந்த நாட்டுக்கு நான் வந்துள்ளது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்தியாவுக்கும், பிரேசிலுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு மிகச் சிறந்த இரு சக்திகளின் சந்திப்பாகும்.
நாம் ‘குளோபல் சவுத்' அமைப்பின் 2 மிகப் பெரிய ஜனநாயக நாடுகள் மட்டுமல்ல, இதுஒரு டிஜிட்டல் வல்லரசுக்கும் (இந்தியா), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வல்லரசுக்கும் (பிரேசில்) இடையிலான சந்திப்பாகும். நாம் இருவருமே பன்முகத்தன்மை கொண்ட நாடுகள் மற்றும் கலாச்சாரத் தொழில் துறையின் மையங்கள். மேலும், நாம் இருவருமே பலதரப்பு உறவுகளையும் அமைதியையும் ஆதரிக்கிறோம்" என்றார்.