மும்பை: கடந்த வெள்ளிக்கிழமை மாலை மும்பை டோங்ரியில் உள்ள நூர் பாக் பகுதியில் இருந்து ரஹ்மத் பாக் மயானம் நோக்கி மொஹரம் மத ஊர்வலம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்களுக்கு உடல் வலியைக் குறைக்கும் வலி நிவாரணி எனக் கூறி சில கேப்சூல் மாத்திரைகளை ஒருவர் விநியோகித்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் பயாஸ் பிரேம்ஜி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பயாஸ் பிரேம்ஜிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் விவாகரத்து ஆகியுள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலில், ஒட்டுமொத்த உலகமே தனக்கு எதிராகத் திரும்பிவிட்டதாக அவர் கருதியுள்ளார். இந்தத் தனிப்பட்ட விரக்தியின் காரணமாக, உலகைப் பழிவாங்க முடிவெடுத்து, மொஹரம் ஊர்வலத்தில் பங்கேற்கும் சுமார் 15,000 மக்களைக் கொல்வதற்குத் திட்டமிட்டதாக அவர் காவல் துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையின்போது , பயாஸின் தாயாரும், சகோதரியும் தற்போது ஈரானில் வசித்து வருவது தெரியவந்துள்ளது. எனவே, இச்சதித் திட்டத்தின் பின்னணியில் ஏதேனும் சர்வதேசத் தொடர்புகள் இருக்கிறதா என்பதைக் கண்டறிய, அவருடைய அலைபேசி தடய அறிவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.