போஜ்சாலாவில் வளாகம்
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் போஜ்சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய வளாகம் தொடர்பான வழக்கில், இந்தூர் உயர் நீதிமன்ற அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பு வெளியிட்டது. அதில், ‘‘வரலாற்று ஆவணங்கள், இலக்கிய குறிப்புகள் போன்றவற்றை ஆராய்ந்த போது போஜ்சாலா வாக் (சரஸ்வதி) தேவி கோயில்தான் என்று உறுதியாகிறது. முஸ்லிம்களின் தொழுகை அங்கு நிறுத்தப்பட வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
இதுகுறித்து இந்திய ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தேசியத் தலைவர் சையத் சாதத்துல்லா ஹுசைனி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசியலமைப்பின் 25, 26-வது பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மத உரிமைகளின் பாதுகாப்பு குறித்து, இந்தத் தீர்ப்பு அரசியலமைப்பு சார்ந்த கேள்விகளை எழுப்பி உள்ள. பல தசாப்தங்களாக போஜ்சாலா வளாகத்தில் வழிபாட்டு முறைகளை இரு சமூகங்களும் பின்பற்றி வந்தனர். இந்நிலையில், ஒரு சமூகத்தின் வழிபாட்டு உரிமைகளைப் பறித்து, மற்றொரு சமூகத்துக்கு முன்னுரிமை அளிப்பது அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை அளிக்கும் கொள்கையைச் சிதைக்கும்.
மேலும், சுதந்திரத்துக்குப் பிறகு இருந்த மத வழிபாட்டு தலங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ‘வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்புச் சட்டம், 1991’ தற்போது புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே, வரலாற்றுச் சர்ச்சைகள் மீண்டும் எழுவதைத் தடுக்க, அந்தச் சட்டத்தை பின்பற்ற வேண்டும்.
அதேபோல், முஸ்லிம்களின் வழிபாட்டுக்கு மாற்று நிலத்தை ஒதுக்கீடு செய்ய முன்வைக்கப்படும் ஆலோசனையும் கவலைக்குரியது. நீதித்துறை தனது செயல்பாடுகளில் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். துரதிருஷ்டவசமாக சமீபத்திய நிகழ்வுகள் இதற்கு நேர்மாறான ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றன. பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகத்தின் அனைத்துக் கவலைகளும், அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்குள் முறையாக தீர்க்கப்படுவதை உறுதி செய்யும். இதற்காக, மேல்முறையீடு செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.