இடது: ராகுல் காந்தி | வலது: சொங்தாம் விக்ரம் சிங்
புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சொங்தாம் விக்ரம் சிங் கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி தலைநகர் டெல்லியில் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: டெல்லி ஆசிரமம் பகுதியில் உள்ள கிலோக்ரி கிராமத்தில் வசித்து வந்த 54 வயதான மணிப்பூர் இசை ஆசிரியரான சொங்தாம் விக்ரம் சிங், தனது வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட சத்தம் மற்றும் இடையூறு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
காவல்துறையின் கூற்றுப்படி, விக்ரம் சிங் தனது வீட்டிற்கு எதிரே உள்ள உணவக ஊழியர்கள் மற்றும் டெலிவரி பாய்கள் எழுப்பிய சத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இந்த மரணத்துக்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது. சொந்த நாட்டின் தலைநகரில், தனது வீட்டின் வாசலிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்குப் பிறகு, நாம் இங்கே பாதுகாப்பாக இருக்கிறோமா? என்ற அதே கேள்வியைத்தான் டெல்லியில் உள்ள ஒவ்வொரு வடகிழக்கு மாநிலக் குடும்பமும் இன்று கேட்கிறது.
வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இந்தச் சட்டவிரோதச் செயல்களைத் தடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெல்லி காவல்துறையும் ஏதேனும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதா? இச்சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். விக்ரம் சிங்கின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ராகுல் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 7 அன்று விக்ரம் சிங் தாக்கப்பட்டதாக டெல்லியின் சன்லைட் காலனி காவல் நிலையத்திற்குத் தகவல் வந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் சத்தம் போட்டதைத் தட்டிக்கேட்டதால் அவர் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுவர்கள் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.