ஆனந்த் தீக்சித்
மும்பை: வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையிலான நூலிழையில் ஊசலாடும் கோமா நோயாளிகளின் நிலை குறித்து ஹரிஷ் ரானா வழக்கு நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தற்போது அதே போன்றதொரு உருக்கமான சூழலில், மும்பையைச் சேர்ந்த ஆனந்த் தீக்சித் (35) என்ற இளைஞர், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக ‘கோமா’ எனப்படும் சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2013ல் மாடியில் இருந்து விழுந்து மூளை பாதிப்படைந்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு உச்ச நீதிமன்ற அனுமதியுடன் கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரிஷ் ரானாவின் நிழலாக தற்போது ஆனந்தின் வாழ்க்கையும் மாறியுள்ளது.
உயிருள்ள சடலமாக முடங்கிக் கிடக்கும் ஆனந்தின் துயரம் 2023ம் ஆண்டு டிசம்பர் 29ம் தேதி தொடங்கியது. கோரக்பூரில் தான் புதிதாக வாங்கிய ஸ்கூட்டரில் சென்ற போது ஏற்பட்ட விபத்து, அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. அன்று முதல் உயிர்காக்கும் உபகரணங்களின் உதவியுடனும், குழாய் வழியாகச் செலுத்தப்படும் உணவுடனும் அவர் காலம் தள்ளி வருகிறார்.
கடந்த 27 மாதங்களாக ஆனந்தின் ஒரு சிறு அசைவுக்காக அவரது பெற்றோர், உறவினர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், அதற்கு மவுனம் மட்டுமே விடையாக எஞ்சி நிற்கிறது. மகனின் இதயத் துடிப்பைத் தக்கவைக்க தீக்சித் குடும்பம் தங்களது ஒட்டுமொத்த சேமிப்பையும், நிலத்தையும் விற்றுவிட்டு தற்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. இதுவரை மருத்துவக் கட்டணமாக மட்டும் ரூ. 4 கோடியை அவர்கள் செலவிட்டுள்ளனர்.
இந்தத் துயரத்துக்கு மத்தியிலும், மும்பை மாநகராட்சி அவர்கள் குடியிருந்த வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது. கட்டிடத்தின் சட்டப்பூர்வ சிக்கல்கள் காரணமாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால், ஐசியூ-வில் மகனுக்காகப் போராடிக் கொண்டிருந்த பெற்றோர் தற்போது வாடகை வீட்டுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
காப்பீடு மற்றும் மருத்துவச் சட்டங்களில் மாற்றம் ஏற்படாத வரை இதுபோன்ற கோமா நோயாளிகளின் நிலை அந்த முழுக் குடும்பத்துக்குமான மரண தண்டனை என்பதற்கு ஆனந்தின் நிலையே தற்போது சாட்சியாக மாறி நிற்கிறது.
கைவிரித்த காப்பீட்டு நிறுவனம்
இது குறித்து ஆனந்தின் தந்தை கண்ணீருடன் கூறியதாவது: என் மகன் மீண்டும் ஒருமுறை ‘அப்பா’ என்று கூப்பிட மாட்டானா என்ற ஏக்கத்தில் என்னிடம் இருந்த அனைத்தையும் விற்றுவிட்டேன். மருத்துவமனை கட்டணங்கள் ஒருபுறம் எங்களைச் சூறையாட, மறுபுறம் ‘கேர் ஹெல்த் இன்சூரன்ஸ்’ நிறுவனம் எங்களது கோரிக்கையை நிராகரித்து எங்களைக் கடனாளியாக்கி விட்டது. நாங்கள் ஐசியூ-வில் மகனின் உயிருக்காகப் போராடிய போது, மாநகராட்சி கொஞ்சமும் மனசாட்சி இன்றி எங்களது வீட்டையும் இடித்துவிட்டது.
நாங்கள் இப்போது நடுத் தெருவில் நிற்கிறோம். மகன் என்றாவது ஒரு நாள் கண் விழிப்பான் என்ற நம்பிக்கையில், அவனது கைக்கடிகாரத்தையும் அலைபேசியையும் இன்னும் அவரது தாயார் கையில் பத்திரமாக வைத்துள்ளார். அவர்கள் எங்களது வீட்டையும், பணத்தையும் பறித்திருக்கலாம். ஆனால், என் மகன் மீண்டும் வருவான் என்ற எங்களது நம்பிக்கையை மட்டும் யாராலும் பறிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.