திக்விஜய் சிங் 
இந்தியா

“ராகுல் தலைமைக்கு பகிரங்க எதிர்ப்பு” - திக்விஜய் சிங்கின் பதிவு பற்றி பாஜக கருத்து

வெற்றி மயிலோன்

புதுடெல்லி: பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் அமைப்பு வலிமையை காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் பாராட்டியது ராகுல் காந்தியின் தலைமைக்கு எதிராக அக்கட்சியில் எழுந்த பகிரங்க எதிர்ப்பு என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்து, ஆர்எஸ்எஸ்-பாஜக-வின் அமைப்பு வலிமையைப் பாராட்டினார். அந்தப் பதிவில், ‘‘இது என்னை மிகவும் ஈர்த்தது. பாஜகவின் தொண்டர் எவ்வாறு தலைவர்களின் காலடியில் அமர்ந்து மாநிலத்தின் முதல்வராகவும், நாட்டின் பிரதமராகவும் ஆனார். இதுதான் அமைப்பின் சக்தி’’ என தெரிவித்திருந்தார்.

மேலும், அப்பதிவில், பாஜக மூத்த தலைவர் அத்வானி கலந்துகொண்ட ஒரு பொது நிகழ்ச்சியில் அவரது காலடியில் தரையில் நரேந்திர மோடி அமர்ந்திருந்த பழைய புகைப்படத்தை இணைத்திருந்தார்.

அவர் தனது பதிவை, அகில இந்திய காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெயராம் ரமேஷ் ஆகியோருடன் பகிர்ந்ததோடு, பிரதமர் நரேந்திர மோடியையும் டேக் செய்திருந்தார்.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி பேசுகையில், “நமது பிரதமர் நரேந்திர மோடி ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால் அவர்களின் தலைவர் ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப் பேரன்.

நமது நரேந்திர மோடி அடித்தளத்திலிருந்து உச்சத்திற்கு உயர்ந்ததால், அவர் தனது கட்சியையும் (பாஜக) அடித்தளத்திலிருந்து உச்சத்திற்கு கொண்டு செல்கிறார். அவர்களின் தலைவர் ‘ஜவஹரின் பேரன்’, அவர் இப்போது ‘உச்சத்திலிருந்து கீழே இறங்கிவிட்டதால்’, அவர் தனது கட்சியையும் தலைகீழாக மாற்றி வருகிறார்.” என்றார்.

திக்விஜய் சிங்கின் இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த திக்விஜய் சிங், “நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியை எதிர்க்கிறேன். அதேநேரத்தில், அதன் கட்டமைப்பை ஆதரிக்கிறேன். அமைப்பைத்தான் நான் பாராட்டியுள்ளேன். நான் ஆர்எஸ்எஸ் மற்றும் மோடியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன். ஒரு அமைப்பின் வலிமையைப் பாராட்டுவது தவறா?” என தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, தனது எக்ஸ் தளத்தில், “திக்விஜய் சிங் ராகுல் காந்திக்கு எதிராக பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார். ராகுல் காந்தியின் கீழ் காங்கிரஸ் அமைப்பு சீர்குலைந்துவிட்டது என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.” என்று கூறினார்.

SCROLL FOR NEXT