இந்தியா

டி.கே.சிவகுமார் உள்ளே... சித்தராமையா வெளியே... - கர்நாடக முதல்வர் ‘பவர் டீலிங்’கில் அடுத்து என்ன?

பாரதி ஆனந்த்

இதோ, அதோ என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த கர்நாடக முதல்வர் மாற்றம் செய்தி இப்போது உண்மையாகி இருக்கிறது. சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக பதவியேற்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது.

கர்நாடக முதல்வர் பதவிக்கான இந்த ‘பவர் டீலிங்’ கதையின் பின்னணியை சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.

கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்​டப்​பேரவைத் தேர்தலில் காங்​கிரஸ் கட்சி வென்​றதைத் தொடர்ந்து முதல்​வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்​பட்​டது. மூத்த தலை​வர்​களான‌ சித்தராமை​யா, டி.கே.சிவகு​மார், ஜி.பரமேஷ்வர் ஆகிய மூவருக்கும் இடையே போட்டி நிலவியது. அதில் சித்தராமையா, டிகேஎஸ் இருவருக்குமே சாதிய பின்புலமும், எம்எல்ஏக்கள் பலமும் சற்று கூடுதலாக இருந்தது. இதனால், இருவரில் யார் என்று டெல்லி மேலிடம் கொஞ்சம் கலங்கித்தான் போனது.

நீண்ட இழுபறிக்கு பின்​னர் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவியும், டி.கே.சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்​பட்​டது. அப்​போது அந்த சுமுக முடிவை எட்டுவதற்கு கைமாறாக இரு​வருக்​கும் தலா இரண்​டரை ஆண்டு​கள் முதல்​வர் பதவி வழங்க காங்​கிரஸ் மேலிடத் தலைவர்கள் சம்​மதம் தெரிவித்த​தாக கூறப்​படு​கிறது. ஆனால், அப்படியொரு ஒப்பந்தம் இருந்தது தனக்குத் தெரியாது என்று சித்தராமையா அண்மையில் டெல்லி மேலிடத்திடம் சொல்லியதாகத் தகவல்.

ஒருவழியாக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவியேற்றனர். ஆனாலும் கூட அமைதி ஒப்பந்தம் காகிதத்தில் இருந்ததே தவிர ஆதரவாளர்களுக்குள் இல்லை என்றே சொல்லலாம். முதல்வர் பதவியில் பங்கிருக்கிறது என்பதை சித்தராமையா தரப்பு மறந்துவிடக் கூடாது என்பதில் டிகேஎஸ் ஆதரவாளர்கள் உறுதியாக இருந்தனர். அவ்வப்போது அதிரடி பேட்டிகள், கருத்துகள் என எதையாவதுச் சொல்லி அதை உயிர்ப்புடன் வைத்திருந்தார்கள்.

அந்தவகையில் பங்கு வைக்கப்பட்ட முதல்வர் பதவி 2.5 ஆண்டுகள் என்ற காலக்கெடு நெருங்கியதுமே டிகேஎஸ் தரப்பிலிருந்து முட்டல், முனகல்களும் வேகமெடுத்தன. அதன் உச்சமாக கடந்த டிசம்பர் மாதம் டிகே சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று பகிரங்கமாகவே அவரது ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்தனர். டிகே சிவகுமார் டெல்லிக்கும் சென்றுவந்ததால் அந்தப் பேச்சு இன்னும் வலுவானது.

தொடர்ந்து, டெல்லி மேலிடமும் சமரச முயற்சிகளை மேற்கொண்டது. சித்தராமையா - டிகே சிவகுமார் மாறிமாறி ஒருவரது வீட்டில் இன்னொருவர் காலை உணவை அருந்தினர். “நாங்கள் ஒற்றுமையோடு இருக்கிறோம்” என்று கூட்டாக தெரிவித்தனர்.

ஆனால், “எதுவாக இருந்தாலும் டெல்லி மேலிடமே முடிவு செய்யும்” என்று சிவகுமார் தனியாகவும், “நான் 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பேன்” என்று சித்தராமையா தனியாகவும் பேட்டிக் கொடுத்து நாற்காலிச் சண்டை இன்னும் முழுவதமாக முடிந்துவிடவில்லை என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

டெல்லி சந்திப்பு ஏற்படுத்திய திருப்பம்:

இந்த நிலையில்தான், டெல்​லி​யில் மே 26 அன்று காங்கிரஸ் தேசியத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலை​மை​யில் முதல்வர் மாற்ற விவ​காரம் தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் உள்​ளிட்​டோர் பங்கேற்றனர்.

சுமார் 6 மணி நேரம் நடை​பெற்ற இந்தக் கூட்​டத்​தில் கர்நாட​கா​வில் முதல்​வரை மாற்​று​வது குறித்து விரி​வாக விவா​திக்​கப்​பட்டு மேலிடத் தலை​வர்​கள், சித்தராமையாவை முதல்​வர் பதவி​யில் இருந்து வில​கு​மாறு கூறியுள்ளனர். மேலும் மாநிலங்​கள​வைத் தேர்தலில் போட்​டி​யிட்​டு, தேசிய அரசி​யலில் கவனம் செலுத்துமாறு வலி​யுறுத்​தியதாகவும் தகவல். அதேபோல், கர்நாடக சட்ட மேலவை உறுப்பினராக உள்ள அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையில் சேர்க்கப்படுவார் என்றும் சமரச திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், மே 28 காலையில் பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ இல்லாமான காவரியில் டிகே சிவகுமார் உணவருந்தினார். ‘பிரேக்ஃபாஸ்ட் டீல்’ ஆக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக சித்தராமையா கூறியதாகவும், அதனையடுத்து அவர் காலில் விழுந்து டிகேஎஸ் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படங்கள் வெளியாகி தொடர்ந்து ராஜினாமா நடக்கும் என்பதை உறுதி செய்தன.

அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் இல்லாததால் அவரது செயலரிடம் கொடுத்துத் திரும்பிய சித்தராமையா “மேலிடம் கேட்டுக் கொண்டதால் ராஜினாமா செய்கிறேன். எனது வாக்கை காப்பாற்றிவிட்டேன்” என்று கூறிச் சென்றார்.

கூடவே, ‘மாநில அரசியலில் எப்பவும் போல் சுறுசுறுப்பாக இயங்குவேன். தேசிய அரசியலில் நாட்டமில்லை’ என்றும் கூறியுள்ளார்.

ஓர் உறைக்குள் இரண்டு கத்தியை பொருத்த முடியாத காங்கிரஸ் மேலிடம் கர்நாடகா சிவகுமாருக்கும், டெல்லி சித்தராமையாவுக்கும் என்று முற்றுப்புள்ளி வைக்க நினைத்த நிலையில், அருகிலேயே ஒரு சிறு புள்ளிகளை வைத்து, இது இன்னொரு சர்ச்சையின் ஆரம்பமோ என்ற அச்சத்தை டெல்லிக்கு கடத்தியிருக்கிறார்.

காங்கிரஸின் ஓபிசி அடையாளம்

சித்தராமையா காங்கிரஸ் தலைவர்களில் மிக முக்கியமான ஓபிசி முகம் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவின் நீண்டகால முதல்வர் என்ற பெருமையை சித்தராமையா கடந்த ஜனவரியில் பெற்றார். அதற்கு முன்னதாக அந்தப் பெருமை டி.தேவராஜு உர்ஸ் வசம் இருந்தது.

சித்தராமையா குருபா என்ற விவசாய சமூகத்தில் பிறந்தவர். சட்டம் பயின்ற இவர், 1983 கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். முன்னதாக ஜனதா தளத்தில் இருந்தார். ஹெச்டி தேவகவுடாவுடனான முரணுக்குப் பின்னர் 2006-ல் காங்கிரஸில் இணைந்தார். அவரது வருகை கர்நாடக காங்கிரஸுக்கும், அரசியலில் அவரது பாய்ச்சலுக்கும் வித்திட்டது.

சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் நலன் சார்ந்த அரசியல் தான் சித்தராமையாவின் பலம். கன்னடத்தில் இதை AHINDA அரசியல் என்று சொல்வார்கள். அவரது அந்த அரசியல் வியூகம் தான் 2023-ல் மீண்டும் காங்கிரஸுக்கு அரியணையைத் தந்ததும் என்றும் கூறப்படுகிறது. கர்நாடக தேர்தல் முடிவை வொக்கலிகா, லிங்காயத் வாக்குகள் தான் முடிவு செய்யும் என்பதை மாற்றி சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் நலன் சார்ந்த அரசியலை கையிலெடுத்து வெற்றியும் கண்டவர்.

வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு மாதம்தோறும் ரேஷனில் 30 கிலோ அரசி வழங்கும் அன்ன பாக்யா திட்டம், அரசு அரசு உதவி பெறும் பள்ளிகள் அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கும் ஷீர பாக்யா திட்டம் அவருக்கு மிகப்பெரிய ஆதரவைப் பெற்றுத்தந்துள்ளது. நலத்திட்டங்களே அவர் கட்டியெழுப்பிய அரசியல்.

அந்த வகையில், கர்நாடக அரசியலில் சித்தராமையின் ஆதிக்கமும், கவனமும் இருப்பது காங்கிரஸ் மேலிடத்துக்கு அவசியம். அதேவேளையில் 2029 மக்களவை தேர்தலில் தேசிய அரசியலில் சித்தராமையா சுற்றிச் சுழல வேண்டும் என்றும் மேலிடம் விரும்புவதாக தகவல்.

சித்தராமையா இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் பதவியை கைமாற்றிவிட வேண்டிய நிர்பந்தம் வந்தபோது, தலித் எம்எல்ஏவான பரமேஸ்வராவை முதல்வராக்க விரும்பினார் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் மீண்டும் சித்தராமையா டெல்லிக்குச் சென்று மேலிடத் தலைவர்களை தனித்தனியாக சந்திக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.

டி.கே.சிவகுமார் - வொக்கலிகா சமூகத்தின் முகம்:

டி.கே.சிவகுமார் கர்நாடக காங்கிரஸின் வொக்கலிகா சமூகத்தின் முகம். இவர் கனகபுரா தொகுதியில் தொடர்ந்து பலமுறை வெற்றி பெற்றவர். ‘கனகபுரா பாறை’ என்ற புனைப்பெயரும் உண்டு. அரசியலில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு தான் இவருடைய அணுகுமுறை.

டி.கே.சிவகுமார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, ​1979 ஆம் ஆண்டு இந்திய தேசிய மாணவர் சங்கத்தில் (NSUI) இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். படிப்படியாக உயர்ந்த அவர் 1981-ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸின் மாநில பொதுச் செயலாராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முதன்முதலில் 1985-ல் காங்கிரஸ் வேட்பாளராக சாந்தனூரில் களமிறங்கினார். தன்னுடைய நிலத்தை அடகு வைத்து தேர்தல் செலவுகளைச் செய்தார். ஆனால் அந்த தேர்தலில் தேவகவுடாவிடம் தோற்றுவிட்டார். இருந்தாலும் அவர் ஓயவில்லை. 1989, 1994, 1999 என அடுத்தடுத்து 3 முறை அந்தத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2008, 2013, 2018 மற்றும் 2023 சட்டப்பேரவை தேர்தல்களில் கனகபுரா தொகுதியில் தொடர் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் மேலிடம் டி.கே.சிவகுமாரை ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த அரசியல்வாதியாகவே பார்க்கிறது. பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அவருடைய உத்திகள் டெல்லி மேலிடத்துக்கு பிடித்தமானவை என்று கூறப்படுகிறது. 2018-ல் கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சியினை ஒருங்கிணைத்தவர்.

முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தான் அவருடைய அரசியல் குரு. இறை நம்பிக்கை சற்று தூக்கலாகவே கொண்டவர். மாநில உரிமைகள் விஷயத்தில் கெடுபிடி காட்டக் கூடியவர்.

இத்தகைய சூழலில் கர்நாடக முதல்வர் பொறுப்பை டி.கே.சிவகுமார் எடுப்பார் என்றால் அவருக்கு சிறுபான்மையினர் நம்பிக்கையை வென்றெடுப்பது ஒரு பெரிய சவாலாக அமையும் என்று கணிக்கப்படுகிறது.

அதுதவிர அடுத்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்குள் கர்நாடகாவின் லிங்காயத், வொக்கலிகா சமூகத்தினர் ஆதரவை பாஜக பக்கமிருந்து காங்கிரஸுக்கு மடைமாற்றவும் வேண்டியிருக்கும். அதேபோல் நாற்காலிக்கு எஞ்சிய காலத்தில் பிரச்சினை வராமலிருக்க சித்தராமையின் ஆதரவாளர்களின் நன்நம்பிக்கையையும் பெற வேண்டும்.

தமிழகத்துக்கு என்ன சவால்?

காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் திட்டத்துக்காக புதிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று சமீபத்தில் டி.கே.சிவகுமார் முழங்கினார்.

இது முதன்முறை அல்ல. மேகேதாட்டு விவகாரத்தில் டி.கே.சிவகுமார் எப்போதுமே உறுதியாகத் தான் இருந்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ள தவெகவுக்கு கர்நாடகத்தில் முதல்வர் மாற்றம் ஏற்படுவது முக்கியமாக கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT