ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற பஸ்தர் ஒலிம்பிக் 2025 விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது:
2026 மார்ச் 31-க்குள் நக்சலிசத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சத்தீஸ்கரில் ஏழு மாவட்டங்களைக் கொண்ட பஸ்தர் கோட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் மிகவும் வளர்ந்த பழங்குடியின பகுதியாக மாற்றுவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நக்சலிசம் என்பது அப்பகுதியின் வளர்ச்சியை தடுத்து நிறுத்தும் ஒரு விஷப்பாம்பு போன்றது. இந்த அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தவுடன் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கும். நக்சலிசத்தால் ஆயுதம் ஏந்துபவர்களுக்கோ, பாதுகாப்பு படையினருக்கோ எந்த பயனும் இல்லை. அமைதியால் மட்டுமே வளர்ச்சிக்கு வழிவகுக்க முடியும்.
2026-ல் பஸ்தர் ஒலிம்பிக்கிற்காக நான் அடுத்தமுறை இங்கு வரும்போது, சத்தீஸ்கர் மட்டுமின்றி நாடு முழுவதிலும் இருந்தும் நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கும்.
எனவே, நக்சல் அமைப்புடன் தொடர்புடையவர்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூகத்தின் பிரதான நீரோட்டத்தில் இணைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.