புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு சொத்துகளை முறைகேடாக கைப்பற்றிய வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் காந்தி மீது டெல்லி போலீஸார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நஷ்டம் காரணமாக 2008-ல் மூடப்பட்டது. இந்த பத்திரிகையை நடத்திய அசோசியேட்டட் ஜர்னல்ஸ் (ஏஜேஎல்) நிறுவனத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.
இந்நிலையில், 2010-ம் ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட யங் இந்தியன் நிறுவனம், அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் கடனை அடைத்துவிட்டு அதை கையகப்படுத்தியது. யங் இந்தியன் நிறுவனத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் காந்திக்கு 76% பங்குகள் உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து, இந்த பரிவர்த்தனை சட்டவிரோதமானது என புகார் எழுந்ததால், இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கை டெல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அமலாக்கத் துறை கொடுத்த புகாரின் பேரில், டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு புதிதாக ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா உள்ளிட்ட 3 பேர், ஏஜேஎல், யங் இந்தியன் மற்றும் டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் ஆகிய நிறுவனங்களின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஏஜெஎல் பங்குதாரர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என கூறப்படுகிறது. அவர்களிடம், ஏஜேஎல் நிறுவனத்தை யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்ற ஒப்புதல் பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.