லத்தூர்: நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான லத்தூர் வேதியியல் பயிற்சி மைய நிறுவனருக்கு ரூ.1,500 கோடி சொத்துகள் இருப்பதும் 8 ஏக்கர் நிலத்தில் அவர் பள்ளி, கல்லூரி கட்டி வருவதும் அம்பலமாகியுள்ளது.
வினாத்தாள் கசிவு காரணமாக, கடந்த மே 3-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மகாராஷ்டிர மாநிலம் லத்தூரை சேர்ந்த ரேணுகாய் வேதியியல் பயிற்சி மைய நிறுவனர் சிவராஜ் ரகுநாத் மோட்டேகான்கர் என்பவரை சிபிஐ கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.
இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், “தேசிய தேர்வு முகமையுடன் தொடர்புடைய வேதியியல் விரிவுரையாளர் பி.வி. குல்கர்னியுடன் மோட்டேகான்கர் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். கசிந்த நீட் வினாத்தாள் மோட்டேகான்கரின் செல்போனில் இருந்தது. தேர்வுக்கு 10 நாட்களுக்கு முன்பே இவர் வினாத் தாளை பெற்றுள்ளார். வினாத்தாளை கசியவிட்ட கும்பலின் தீவிர உறுப்பினராக இவர் செயல்பட்டுள்ளார்” என்றனர்.
மோட்டேகான்கர் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், ஒரு பகுதிநேர ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கியுள்ளார். 1999- 2000 காலகட்டத்தில், லத்தூரில் ஒரு சிறிய கடையில் வெறும் 10 மாணவர்களை கொண்டு அவர் ‘ரேணுகாய் வேதியியல் வகுப்புகள்' (ஆர்சிசி) என்ற பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளார். காலப் போக்கில், இந்த நிறுவனம் மிக வேகமாக விரிவடைந்தது. தற்போது லத்தூர், நாந்தேட், சத்ரபதி சம்பாஜிநகர், புனே, அகோலா, நாசிக், சோலாப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இது செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு தற்போது சுமார் ரூ.1,500 கோடியாக இருக்கும் என கருதப்படுகிறது. 40,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த நிறுவனத்தில் பயின்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லத்தூர் அருகே கோபேகான் ஷிவார் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தில் இவர் பள்ளி, கல்லூரி கட்டி வருவது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த நிலத்தில் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பல அடுக்குக் கட்டிடம் உருவாகி வருவதும் அதன் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் இருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மோட்டேகான்கரின் வருமான ஆதாரம் மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த 2025-ல் இவரது பயிற்சி மையங்களில் படித்த 19 மாணவர்கள் நாடு முழுவதும் எய்ம்ஸ் மருத்துவமனைகளில் அட்மிஷன் பெற்றுள்ள நிலையில் இது தொடர்பாகவும் சிபிஐ விசாரித்து வருகிறது. நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் வேதியியல் விரிவுரையாளர் பி.வி.குல்கர்னி, உயிரியல் விரிவுரையாளர் மனிஷா மந்தாரே உள்ளிட்ட 10 பேரை சிபிஐ இதுவரை கைது செய்துள்ளது.