இந்தியா

நீட் தேர்வு ரத்தும் தாக்கமும்: பரிதவிக்கும் மாணவர்களுக்கு தீர்வுதான் என்ன?

பாரதி ஆனந்த்

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 22.80 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்தச் சூழலில் நீட் தேர்வுக்கு முன்பாக ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இது குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் ராஜஸ்தான் போலீஸார் இணைந்து நடத்திய விசாரணையில் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வை எழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இதுதான் இன்றைய முதன்மைச் செய்தி.

பிறருக்கு வேண்டுமானால் இது ஒரு ஃப்ளாஷ் செய்தியாக இருக்கலாம். ஆனால், ‘தொடர்ந்து 3 ஆண்டுகளாக எழுதுகிறேன், எனது கடைசி முயற்சி இது. நிச்சயம் மருத்துவராகிவிடுவேன்’ என்று சொல்லும் மாணவர்களுக்கும், ‘நகை, நிலம் அடகு வைத்தாவது நீட் கோச்சிங்குக்கு கட்டிய கட்டணம் வீணாகாது. நம் வீட்டிலும் ஒரு மருத்துவர் உருவாகிறார்’ என்ற நம்பிக்கையில் இருந்த நடுத்தர வர்க்க பெற்றோருக்கும் இது நிச்சயமாக வெறும் செய்தியல்ல. பேரிடி.

நீட் தேர்வு ரத்து குறித்து கருத்து தெரிவித்த மாணவர்கள் பலரும், மீண்டும் தாங்கள் அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டதாகக் கூறினர்.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், “நான் மூன்றாவது முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளேன். இந்த நேரத்தில் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்கள். தேசிய தேர்வு முகமை எப்படி இவ்வளவு மெத்தனமாக இருக்க முடியும்? மருத்துவர் கனவில் 3 ஆண்டுகள் ஓடிவிட்டன. வேறு படிப்பை நாடியிருந்தால் நான் இந்நேரம் கல்லூரியை முடித்திருப்பேன்.

எனது வாழ்நாளின் மிக முக்கியமான ஆண்டுகள், எங்களின் இளமைக் காலம், விளையாட்டு, வேடிக்கைகள் என எல்லாவற்றையும் நீட் தேர்வுக்காக தியாகம் செய்திருக்கிறோம். தேர்வு முடிந்ததே என்று நிம்மதிப் பெருமூச்சை முழுமையாக அனுபவிப்பதற்குள், எங்களின் இயல்பு மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது. தேர்வு பயம் தொற்றிக் கொண்டது. கூடவே இனியும் எப்படி என்டிஏ-வை நம்ப முடியும் என்ற அச்சமும் வந்திருக்கிறது” என்றார்.

இன்னொரு பெயர் குறிப்பிட விரும்பாத மாணவர், “நீட் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களாகிய நாங்கள் சந்திக்கும் கெடுபிடிகள் பற்றி நீட் கொண்டுவரப்பட்ட இத்தனை ஆண்டுகளில் பலரும் எழுதிவிட்டனர். ஆனால் எதுவுமே மாறவில்லை. கிட்டத்தட்ட ஒரு குற்றவாளியைப் போல்தான் தேர்வு அறைக்குச் செல்லும் முன்னர் சோதிக்கப்படுகிறோம்.

எங்களை அத்தனை கெடுபிடிக்கு உள்ளாக்கும்போது தேசிய தேர்வு முகமையால் வினாத்தாள் கசிவை தடுக்க இயலாதா? இது ஏதோ இந்த முறை நேர்வதல்ல. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று பல்வேறு செய்திகள் வரத்தான் செய்கின்றன. இது எங்களைப் போன்று கடின உழைப்பைப் போட்டுவிட்டு காத்திருக்கும் மாணவர்களுக்கு நேர்மை பயனற்றது என்ற கருத்தை அல்லவா திணிக்கிறது!” என்றார்.

கோட்டா கோச்சிங் ஃபேக்டரி

நீட் தேர்வுக்கு தீவிரமாகத் தயாராவோர், தயார் செய்ய நிர்பந்திக்கப்படுவோர் செல்லும் இடம்தான் ராஜஸ்தானின் கோட்டா பகுதி. அந்த டவுன் இப்போது போட்டித் தேர்வு பயிற்சிகளின் கூடாரமாகிவிட்டது. நாள் முழுக்க படிப்பு, பயிற்சித் தேர்வுகள், மதிப்பீடுகள், வீட்டிலிருந்து வரும் ‘நல்லா படிச்சிடு’ என்ற நெருக்குதல்கள் என ஒவ்வோர் ஆண்டும் நெருக்கடிகளுக்குள் சிக்கிய பிஞ்சு மனங்களின் நிலை சொல்லி மாளாது.

நீட் தேர்வுக்கு அஞ்சி கோட்டாவில் மட்டுமல்ல, பரவலாகவே தற்கொலைகள் நடக்கின்றன. தற்கொலைகளைத் தடுக்க ஃபேன்களைச் சுற்றி கம்பி வலை, கண்காணிப்புக் கேமராக்கள், மொட்டை மாடி செல்ல முடியாதபடி க்ரில்கள் என்று பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளனவே தவிர, நீட் தேர்வு மாணவர்களை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது.

“பாஜக ஊழலால் நசுப்படும் எதிர்காலம்”

“இந்த ஆண்டும் நீட் வினாத்தாள் கசிந்து முறைகேடுகள் வெளிவந்து, தேர்வு ரத்தாகியிருக்கிறது. ஒரு தேர்வின் ஒவ்வொரு படிநிலையிலும் மோசடி நிறைந்ததாகவே நீட் இருக்கிறது. நீட் தேர்வே ஒரு மோசடிதான். பழையபடி பிளஸ் 2 தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்” என்று தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “சில தந்தைகள் கடன் வாங்கினார்கள், சில தாய்மார்கள் தங்கள் நகைகளை அடகுவைத்தனர். லட்சக்கணக்கான மாணவர்கள் விடிய விடிய கண்விழித்து உழைத்தனர். எல்லாவற்றிற்கும் பலன், கசிந்த வினாத்தாள்கள், அரசு மெத்தனம், கல்வித்துறையில் நடக்கும் ஊழல். பாஜகவின் ஊழலால் மாணவர்கள் எதிர்காலம் நசுப்படுகிறது” என்று சாடியுள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் போல் பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானில் மாநில அரசின் தேர்வாணையங்களின் தேர்வு வினாத்தாள்கள் கசிவது அடிக்கடி நடக்கும் பிரச்சினையாகவே இன்றளவும் இருக்கிறது.

மேலும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்கள் பலவும் ராஜ்ஸ்தான், மத்தியப் பிரதேசம், பிஹார் என்றே நடைபெறுகிறது. இந்த முறை தேர்வு வினாத்தாள் கசியவிட்டதின் பின்னணியில் இளைஞர் ஒருவர் நாசிக் நகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தேசம் தழுவிய தேர்வுகள் ஒன்றும் புதியது அல்ல. காலங்காலமாக யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம் தேர்வுகளை நேர்மையாக நடத்தி அதிகாரிகளைத் தேர்வு செய்கிறது. ஆனால், தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்வில் மட்டும் ஏன் வினாத்தாள் முறைகேடு, ஆள்மாறாட்டம் என்று குழப்பங்கள் நீடிக்கிறது என்பது பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது.

‘இனி மாநில அரசுகளே...’

இந்தச் சூழலில், “மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு என்பது தேவையற்றது. இத்தனை ஆண்டுகளாக தேர்வு நடத்தியும் வெளிப்படைத் தன்மை இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் ஏதேனும் ஒரு முறைகேடு நடைபெறுகிறது. இதனால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும். ஒருவேளை நுழைவுத் தேர்வு நடத்தியே ஆக வேண்டும் என்றால், மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும்.” என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.

‘தமிழக அரசின் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டங்கள் கூட தேசிய அளவிலான தேர்வுகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மாற்றப்பட்டுவிட்டு தான் நீட் சுமை வேண்டாம் என்ற கோஷம் எழுப்பப்பட்டது. ஆனால், என்டிஏ எதிலும் மாற்றம் செய்யாமல் குளறுபடிகளுக்கு ஈடு கொடுப்பது ஏன்?’ என்று சமூக நல ஆர்வலர்கள் வினவுகின்றனர்.

‘ஏன் இந்த பிடிவாதம்?’

“நீட் தேர்வு ஏதோ தகுதி, திறமைகளை வெளிக்கொணரும் என்று உருவாக்கப்பட்ட பிம்பம் தகர்ந்து வருகிறது. தேசியத் தேர்வு முகமையே ஒரு தேர்வை முறையாக நடத்துகிற தகுதியை, திறமையைப் பெற்றிருக்கிறதா என்ற பெருங்கேள்வி எழுந்துள்ளது. மிகப் பெரிய மோசடி வலைப்பின்னல் நீட் தேர்வை சுற்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பதில் ஐயமில்லை. நீட் தேர்வே கூடாது எனும் கோரிக்கையை தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் பலவும், பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து முன்வைத்து வருவதன் நியாயத்தை இந்தத் தேர்வு ரத்து மீண்டும் நிரூபித்துள்ளது. ஆகவே, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

பாமக தலைவர் அன்புமணியோ, “தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதைத் தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவதும்தான் அதன் நோக்கங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் கடந்த ஆண்டு வரையிலான 9 ஆண்டுகளில் ஓராண்டில் கூட இந்த நோக்கங்கள் நிறைவேற்றப்படவில்லை.

மருத்துவக் கல்வி வணிக மயமாக்கப்படுவதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வே வணிக மயமாகிவிட்டது என்பது தான் உண்மை. நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி ஆண்டுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டித் தரும் வணிகமாகிவிட்டது. அதனால் மருத்துவப் படிப்பு ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருகிறது. இன்னொரு பக்கம் நீட் அச்சத்தால் மாணவர்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. இப்படியாக யாருக்கும், எந்த வகையிலும் பயனளிக்காத, எதிர்மறையான விளைவுகளை மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நீட் தேர்வு இனியும் தேவையில்லை. எனவே, நீட் தேர்வை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும்” என்றார்.

மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “எத்தனை முறை குழப்பம்? எவ்வளவு முறைகேடு? இருந்தாலும் ‘நீட்’டிய வாளை உறைக்குள் போட மாட்டோம் என ஏன் இந்த பிடிவாதம்? மாநில உரிமைகள் மீதும், மாணவர் எதிர்காலம் மீதும், வீசப்படும் கொடுவாள் - இந்த ‘நீட்’டை முறிப்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

‘தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக. நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் அரசுத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக. இப்போது இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் இல்லாத தவெக ஆட்சி அரியணை ஏறியுள்ளது. தமிழக இளைஞர்களின் வோட் பேங்கில் ஏறி கரை சேர்ந்த விஜய், அடுத்தடுத்த தேர்தலில் அவருக்கு வாக்களிக்கப் போகும் முதல் தலைமுறை வாக்காளர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள நீட் எதிர்கொள்ளும் எதிர்கால வாக்காளர்களுக்கு என்ன செய்யப் போகிறார்?

இல்லையேல், எல்லோரையும் வாக்காளர்களாகப் பார்க்காமல் கருகும் குருத்துகளுக்கு என்ன மாதிரியான உதவிக் கரத்தை நீட்டப் போகிறார்?’ என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

நீட் தேர்வு வினாத்தாள் குழப்பத்துக்கு எதிராக வட மாநிலங்கள், ஆந்திரா, தமிழகம் எனப் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. மாணவர்கள் கடினமான நீட் தேர்வை ரிப்பீட் மோடில் எதிர்கொள்வதா அல்லது நீட் வேண்டாமா எனப் போராடுவதா என்று தங்கள் உயர் கல்வி கனவை அடகுவைத்து பரிதவிப்புடன் காத்திருக்கின்றனர்!

SCROLL FOR NEXT