ராஜஸ்தானின் பிகானிரில் பசுக்கள் மீது மலர்களைத் தூவி வழிபடும் இந்துக்கள் | கோப்புப் படம்

 
இந்தியா

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க முஸ்லிம் அமைப்புகள் வலியுறுத்தல்

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், இந்த கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை மே.28-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இச்சூழலில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஜாமியத் உலமா-இ-ஹிந்த் (அர்ஷத் மதானி பிரிவு) அமைப்பின் தலைவரான மவுலானா அர்ஷத் மதானி, பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இவரது கோரிக்கைக்கு பல முஸ்லிம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இது போன்ற கோரிக்கைகள் இதுவரை இந்து அமைப்புகளிடமிருந்தே வந்துள்ள நிலையில், முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கும் இக்கோரிக்கை தனித்துவமானதாகவும், முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.

'அகில இந்திய முஸ்லிம் ஜமாத்' அமைப்பின் தேசியத் தலைவரான மவுலானா ஷஹாபுதீன் ரிஸ்வி, பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க வேண்டும் என்ற மதானியின் கோரிக்கைக்கு முழு மனதுடன் ஆதரவு தெரிவித்துள்ளார். பிடிஐ (PTI) செய்தி நிறுவனத்திடம் பேசிய ரிஸ்வி, “இக்கோரிக்கை தொடர்பாகப் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குவதே முதன்மையான நோக்கம். அந்த நோக்கத்தை முன்னிறுத்தி, முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் விரைவில் டெல்லியில் நடைபெறவுள்ளது.

அக்கூட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய ஒரு கூட்டு மனு தயாரிக்கப்பட்டு, பின்னர் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட நாட்டின் உயர்மட்டத் தலைவர்களிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இக்கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

ஷியா பிரிவு முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய ஷியா தனிச் சட்ட வாரியத்தின் தேசியப் பொதுச்செயலாளர் மவுலானா யாசூப் அப்பாஸ், “பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானதே. அக்கோரிக்கையின் மீது முழு மனதுடன் செயல்படுவது அரசின் பொறுப்பு.

சில மாநிலங்களில் பசுக்கள் மீதான தடைகள் எதுவும் இன்றி உண்ணப்படுகிறது. அதே வேளையில், வேறு சில மாநிலங்களில் பசுவின் பெயரால் உயிர்கள் பறிக்கப்படும் முரண்பாடான சூழல் நிலவுகிறது. இதை தடுக்க, பசுக்கள் குறித்த அரசின் நோக்கம், அதன் கொள்கைகளில் தெளிவாகப் பிரதிபலிக்க வேண்டும். அதன் மூலம் ஒரு சீரான அணுகுமுறை உறுதி செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் துணைத்தலைவர் கவுசர் ஹயாத் கான், “இக்கோரிக்கை தொழில்நுட்ப ரீதியாகச் சரியானதே. அதனை அரசு முழுமையான நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும். இதை வலியுறுத்த வேண்டி முஸ்லிம் அமைப்புகள் அனைத்தும் ஒரே மேடையில் திரண்டால் மட்டுமே பலன் கிடைக்கும்.

கோவா, அசாம் மற்றும் பல்வேறு வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி இன்றும் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி உண்ணப்படுகிறது. உபி, உத்தராகண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பசுவதை அரசியல்மயமாக்கப்படுகிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியில் உள்ளது” என விமர்சித்தார்.

சன்னி பிரிவு முஸ்லிம்களின் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் மூத்த நிர்வாக உறுப்பினரான மவுலானா காலித் ரஷீத் பிரங்கி மெஹாலி, “நமது இந்து சகோதரர்கள் பசு மீது மதரீதியான உணர்வுகளைக் கொண்டுள்ளனர். எனவே, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், பசு தேசிய விலங்காக அறிவிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பசுவதை தொடர்பான சட்டங்களில் ஒருமைப்பாடு இருக்க வேண்டும். இதற்காக, பசுவதைக்கு எதிரான ஒரே சீரான சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் 'குரேஷி' சமூகத்தினரின் முக்கிய அமைப்பான 'அகில இந்திய குரேஷி ஜமாத்' தலைவர் சிராஜ் குரேஷி, “மேற்கு வங்கத்தில் தற்போது அரங்கேறி வரும் அரசியல் நிகழ்வுகளே இதற்கு காரணமாகி விட்டது. பசுவை 'தேசிய விலங்காக' அறிவிக்க தேவைப்படும் பட்சத்தில், பிரதமரைச் சந்தித்துப் பேச எனது அமைப்பு முயற்சிக்கும். ஏனெனில், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது” எனக் குறிப்பிட்டார்.

பசு வதை தொடர்பாக நடைபெறும் அரசியல் ஆதாய முயற்சிகளை முறியடிக்கும் நோக்கிலும், கும்பல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கிலும் இத்தகைய முயற்சிகளை இஸ்லாமிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் வலியுறுத்த முஸ்லிம் அமைப்புகள் தம் சமூகத்தினர் இடையே ஒருமித்த கருத்தை உருவாக்கப் முயல்கின்றனர்.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வட மாநிலங்களின் முதல்வர்களை நேரில் சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக, நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட, முஸ்லிம்கள் அதிகமாக உள்ள உத்தரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தை முதலில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என முஸ்லிம்கள் கோருவது புதிதல்ல. கடந்த 2014 இல் மும்பையில் நடைபெற்ற அனைத்து மத மாநாட்டில் அர்ஷத் மதானி இதே கோரிக்கையை முன்வைத்திருந்தார். அதேபோல், 2017 இல் உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்ற யோகி ஆதித்யா நாத், பசு வதையைத் தீவிரமாகக் கட்டுப்படுத்த முனைப்பு காட்டியது. அனைத்து சட்டவிரோத இறைச்சிக் கூடங்களும் மூடப்பட்டன. எனினும், எருமை இறைச்சி வர்த்தகத்திற்கு, விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டன.

SCROLL FOR NEXT