எம்.பி. நவாஸ்கனி | கோப்புப் படம்

 
இந்தியா

VB-G RAM G | மாநிலங்களுக்கு நிதிச்சுமை, ‘காந்தி’ அடையாள அழிப்பே நோக்கம்: நவாஸ்கனி எம்.பி

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்டது என்பது தான் உங்களுக்கு பிரச்சனையா? அல்லது தேசப்பிதா மகாத்மா காந்தி பெயர் இதில் இடம்பெற்று இருப்பது பிரச்சினையா?” என மக்களவையில் நவாஸ்கனி எம்.பி பேசியுள்ளார்.

'விக்சித் பாரத் கிராம்ஜி' என்ற புதிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான சட்டத் திருத்த மசோதா மீதான விவாதத்தில் ஐயூஎம்எல் ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்.பி.யான கே.நவாஸ்கனி பேசியது: “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் நாட்டினுடைய ஏழைகள், விவசாயிகள், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கான வாழ்வாதாரத்துக்கான திட்டம். அவர்களுடைய வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கக் கூடிய திட்டம். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மகத்தான திட்டம்.

இந்த மசோதாவை நாட்டினுடைய கிராமப்புற ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தை, சமூக பாதுகாப்பிலே முக்கியமான அங்கம் வகிக்கக் கூடிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முழுமையாக ஒழித்துக் கட்டக் கூடிய சட்டமாக இதை அறிமுகப்படுத்தி இருக்கின்றீர்கள்.

கிராமப்புறங்களில் இருக்கக் கூடிய ஏழை குடும்பத்திலே அடுப்பு எரிகிறது என்று சொன்னால், அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் இந்த திட்டம். இந்த மசோதா ஏழைகளினுடைய வயிற்றோடு விளையாடுகிறது. இந்த மசோதாவில் ஒரு முதியவருடைய கைரேகை இயந்திரத்தில் பதியவில்லை என்று சொன்னால், சம்பளம் இல்லை.

அந்த நாள் அந்த குடும்பத்துக்கு உணவு இல்லை. இது வளர்ச்சியா? ஒரே கையெழுத்தில் ஒன்றிய அரசு நிதியை நிறுத்தலாம். அதாவது ஒரே கையெழுத்தில் ஆயிரக்கணக்கான வீடுகளினுடைய அடுப்புகளை அணைக்கலாம். இந்த மசோதா மத்திய அரசின் அதிகார குவிப்பையும், மாநிலங்கள் மீதான நிதிச்சுமையும், நாட்டின் அடையாள அழிப்பையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இதுவரை 100 நாள் வேலை திட்டத்தில் 90 சதவீத பங்களிப்பை மத்திய அரசும், 10 சதவீத நிதியை மாநில அரசும் பங்களிப்பாக அளித்து வந்தது. ஆனால், இந்த சட்ட திருத்தத்தின் மூலமாக 60 சதவிகிதம் மத்திய அரசும் 40 சதவீதத்தை மாநில அரசும் கொடுக்கக்கூடிய அளவிலே சட்ட திருத்தம். ஏற்கெனவே இந்த திட்டத்திற்கான நிதிகள் எல்லாம் முறையாக விடுவிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு மட்டும் ரூ.3000 கோடிக்கும் அதிகமான நிதி விடுவிக்கப்படாமல் இருக்கின்றது. கல்விக்கான நிதி நிலுவை, ஜிஎஸ்டி நிதி நிலுவை என்று மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய பல்வேறு துறைகளுக்கான நிதிகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இந்த திட்டத்திலும் 10 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தி இருப்பது எந்த அளவு நியாயமானது. இதுவரையும், மாநில அரசுகள் ஒதுக்கி வந்த வேலைகளை இனி மத்திய அரசு மட்டுமே ஒதுக்க முடியும் என்று திருத்தி இருக்கின்றீர்கள். அந்தந்த மாநிலங்களில் என்ன வேலை தேவை என்பது மத்திய அரசுக்கு எப்படி தெரியும்? இந்த முறையின் மூலமாகத்தான் எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களுக்கு குறைவான வேலைகளை ஒதுக்குவீர்கள்.

பாஜக அரசு ஆளுகின்ற மாநிலங்களுக்கு அதிகமான வேலைகளை ஒதுக்கி, ஆட்சியை தொடர்வதற்கு முயற்சிப்பீர்கள், இதில் வெளிப்படைத்தன்மை இருக்குமா? என்று கேட்கின்றேன். கடந்த 10 ஆண்டுகளாக, பல்வேறு உறுப்பினர்கள் இந்த அவையில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக உயர்த்த வேண்டும்.

ஊதியத்தை இன்றைக்கு இருக்கக்கூடிய விலைவாசிக்கு தகுந்தார் போல் உயர்த்தி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம். இதில் ஒன்றும் உயர்த்தவில்லை, காந்தியினுடைய உயிரை பறித்த தத்துவத்தை கொண்டவர்கள், இன்றைக்கு காந்தியின் பெயரையும் பறித்துக் கொண்டீர்கள்.

காந்தியை கொன்றவர்கள், இன்று அவருடைய பெயரிலே உள்ள திட்டத்தை கொன்று இருக்கிறீர்கள். தங்களுக்கென்று எந்த வரலாறும் இல்லாத, எந்த அடையாளமும் இல்லாதவர்கள், இந்த நாட்டினுடைய வரலாற்றை, அடையாளங்களை அழிப்பதிலே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். முதலிலே நாட்டில் உள்ள சாலைகளின் பெயர்களை மாற்றினீர்கள் மாவட்டங்களின் பெயர்களை மாற்றினீர்கள் ரயில் நிலையங்களின் பெயர்களை மாற்றினீர்கள். இப்போது தேசப்பிதாவின் உடைய பெயரை இந்த திட்டத்திலிருந்து மாற்றுகின்றீர்கள்.

இது காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பது தான் உங்களுக்கு பிரச்சனையா? அல்லது மகாத்மா காந்தி தேசப்பிதாவின் பெயர் இதில் இடம் பெற்று இருப்பது உங்களுக்கு பிரச்சனையா? சுதந்திரப் போராட்டத்தில் துளியும் பங்கேற்காத உங்களால் இது போன்ற வேலைகளை மட்டும் தான் செய்ய முடியும்.

இந்த அவையில் முஸ்லிம் லீக்கின் மூன்று உறுப்பினர்கள் தான் இருக்கின்றோம். ஆனால், எங்களுக்கு ஒரு வரலாறு இருக்கின்றது. எங்களுடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களால் கட்டமைக்கப்பட்ட கட்சி. இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதில் அங்கம் வகித்த தலைவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி” என்று அவர் பேசினார்.

SCROLL FOR NEXT