பிரதமர் மோடி
புதுடெல்லி: மாணவர்கள் போராட்டத்தில் அவதூறாகப் பேசிய எனது மகளை பிரதமர் மோடி மன்னித்ததன் மூலம் அவர் புது வாழ்வு அளித்துள்ளார்.
என் மகள் மீதான எப்ஐஆரை ரத்து செய்யவும் பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என சிறுமியின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் பிரதமர் மோடி பற்றி அவதூறாகப் பேசியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன.
இதில் ஒருவர் 15 வயது சிறுமி. இவர் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டு சமூக ஊடகத்தில் வீடியோ வெளியிட்டார். “போராட்டத்தில் சிலரின் தூண்டுதலால் பிரதமருக்கு எதிராக தவறான கருத்துக்களை கூறிவிட்டேன் என்றும், இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்” என அந்த சிறுமி கூறினார்.
பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ பதிவிலும், “என்னை பற்றி தவறாக பேசியவர்களை மன்னிக்கிறேன்” என கூறினார்.
இந்நிலையில் பிரதமரிடம் மன்னிப்பு கேட்ட சிறுமியின் தாய் அளித்த பேட்டியில் கூறியதாவது: “அவதூறு கருத்துக்களை தெரிவித்த எனது 15 வயது மகளுக்கு மன்னிப்பு அளித்ததன் மூலம், பிரதமர் மோடி புது வாழ்வு அளித்துள்ளார்.
அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது மகள் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆரையும் ரத்து செய்ய பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். அப்போது தான் எனது மகள் அமைதியாக வாழ முடியும்.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்க வேண்டும். அவர்களை போராட்ட இடங்களுக்கு அனுமதிக்க கூடாது. உலகத்தை பற்றியும், மூத்தவர்களை மதிப்பது பற்றியும் சிறு குழந்தைகளுக்கு எதுவும் தெரிவதில்லை.” இவ்வாறு சிறுமியின் தாய் கூறியுள்ளார்.