

நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சியின் மாணவர் அணி சார்பில் மும்பையில் நேற்று நிகழ்ச்சி நடந்தது.
அதில் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசியதாவது: மகாராஷ்டிர மாநிலத்தில் பிரசித்த பெற்ற சித்திவிநாயகர் கோயில் அறங்காவலர்களின் விழிப்புணர்வால், உண்டியல் பணத்தைத் திருடிய சில ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.
இது தொடர்பாக 8 அறங்காவலர்கள் மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, திருட்டு வெளிச்சத்துக்கு வரும் முன் வாராந்திர காணிக்கை ரூ.50 லட்சத்துக்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், நடவடிக்கை எடுத்த பிறகு அது ரூ.1.5 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.18 கோடி திருடப்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு ராஜ் தாக்கரே கூறினார்.
இதுகுறித்து சித்திவிநாயகர் கோயில் அறக்கட்டளையின் தலைவரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தலைவருமான சதா சர்வாங்கர் கூறுகையில், “இவ்விவகாரத்தில் தொடர்புடைய 9 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயிலின் ஆண்டு வருமானம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.114 கோடியாக இருந்த நிலையில், தற்போது ரூ.182 கோடியாக உயர்ந்துள்ளது,” என்று விளக்கமளித்தார்.
அயோத்தி ராமர் கோயில் காணிக்கைத் திருட்டு வழக்கில் பலரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், ராஜ் தாக்கரேயின் இந்த அதிரடி குற்றச்சாட்டும், பிரதமர் மோடிக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையும் தற்போது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.