இந்தியா

தெலங்கானா அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்

1.44 லட்சம் மாணவர்கள் பயனடைவர்

என்.மகேஷ்குமார்

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரிகளில் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன் மூலம் 1.44 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.

தெலங்கானாவில் கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் (பிளஸ்-1, பிளஸ்-2) திறக்கப்பட்டன. இதனையொட்டி, தெலங்கானா அரசு நேற்று முதல் 1ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் காலை சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்தியது.

ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவன் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்னம் பிரபாகர் இத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவியருடன் அமர்ந்து காலை சிற்றுண்டியை சாப்பிட்டார். இதன் மூலம் தெலங்கானாவில் படிக்கும் 1.44 லட்சம் மாணவ, மாணவியர் பயன் அடைகின்றனர்.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று முதல் அனைத்து பள்ளிகளிலும் இலவச பாட புத்தகங்கள், பைகள் வழங்கும் பணிகளும் தொடங்கின. இதனால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT