மும்பை: புதிய மொபைல் போன் கேட்டு வீட்டில் தகராறு செய்த 19 வயது மகன், மலை உச்சியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் நடந்துள்ளது. மகனை காப்பாற்ற முயன்று தந்தை உயிரிழந்த நிலையில், அதனை பார்த்துக் கொண்டிருந்த தாய் கீழே குதித்து உயிர் விட்டுள்ளார்.
சத்ரபதி சம்பாஜிநகரின் ஜால்டா பாட்டா பகுதியைச் சேர்ந்தவர் முரளிதர் சந்த்குடே (48). இவரது மனைவி சங்கீதா. இவர்களின் மகன் குணால் (19).
புதிய மொபைல் போன் வாங்கத் தர வேண்டும் என்று இன்று காலை தனது பெற்றோரிடம் குணால் தகராறில் ஈடுபட்டுள்ளார். பெற்றோர் மறுத்ததை அடுத்து அவர் அருகில் உள்ள மலைக் குன்றுக்குச் சென்றுள்ளார்.
மகனை சமாதானப்படுத்த அவரது பெற்றோர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். மலை உச்சிக்கு அவர்கள் சென்றதைப் பார்த்த பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மலைக்கு கீழே வலையை விரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், குணால் மலையின் விளிம்பில் தனது இடத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வந்து திடீரென கீழே குதித்துள்ளார். அப்போது அவரைக் காப்பாற்ற முயன்ற முரளிதரும் கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த சங்கீதா, மலை உச்சியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில், மூவரும் உயிரிழந்தனர்.
உடல்களை மீட்ட காவல் துறையினர், பிரதேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் ஆகியோரின் கண் முன்பாகவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.