புதுடெல்லி: எதிரிநாட்டு டேங்க்குகளை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
எதிரிநாட்டு டேங்க்குகள் மற்றும் கவச வாகனங்களை தாக்கி அழிக்க இலகு ரக ஏவுகணை ஒன்றை டிஆர்டிஓ உருவாக்கியது. இதை தோளில் சுமந்து செல்லும் லாஞ்சர் மூலம் ஏவ முடியும். மூன்றாம் தலைமுறை ஏவுகணையான இதற்கு எம்பிஏடிஜிஎம் என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு சுமந்து செல்லக்கூடிய டேங்க் எதிர்ப்பு ஏவுகணை என பொருள்.
இந்த ஏவுகணையை தோளில் சுமந்து செல்லும் லாஞ்சர் மூலம் ஏவும் போது, இது வானில் உயரமாக சென்று பின் செங்குத்தாக கீழ் இறங்கி நகர்ந்து செல்லும் இலக்கை தாக்கும். இந்த ஏவுகணையில் உள்ள அனைத்து அம்சங்களும் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஆர்டிஓ அமைப்பின் துணை நிறுவனங்கள் உருவாக்கின.
இந்த ஏவுகணை மகாராஷ்டிரா மாநிலத்தின் அகில்யா நகரில் உள்ள பாலைவன பரிசோதனை மையத்தில் நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. 14.5 கிலோ எடையுள்ள லாஞ்சரை ஒருவர் தோளில் சுமந்து சென்று, மற்றொருவரின் உதவியுடன் இலகுரக ஏவுகணையை ஏவினார்.
லாஞ்சரில் இருந்து சீறிப் பாய்ந்த ஏவுகணை வானில் உயரே சென்று பின் கீழ் இறங்கி இலக்கை துல்லியமாக தாக்கியது. இந்த சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக முடித்தது.