திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில், நாட்டின் 80-வது சுதந்திர தின விழா நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்ட மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம்நாராயண ரெட்டி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அதன் பின்னர் அமைச்சருக்கு லேசான மயக்கம் வந்து கீழே விழப்போனார். உடனே அவரது மெய்க்காப்பாளர்கள் தாங்கிப் பிடித்து உட்கார வைத்தனர். பின்னர், அங்கிருந்த மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர், வழக்கம்போல் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற அமைச்சர், 11,649 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1,181 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
மேலும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள், மோப்ப நாய்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார். பின்னர், தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். உத்தம அரசு ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார். இதில், திருப்பதி ஆட்சியர் வெங்கடேஸ்வர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.