மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மாநகராட்சிக்கான 227 வார்டுகளிலும் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்ததற்கு அடையாளமாக விரலில் வழக்கமாக வைக்கப்படும் அழியா மைக்குப் பதிலாக மார்க்கர் பேனா பயன்படுத்தப்படுகிறது. அது குறித்து பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் 29 மாநகராட்சிகளுக்கான வாக்குப்பதிவு இன்று (ஜனவரி 15) காலை தொடங்கியது. மாலை 5.30 மணி அளவில் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. இந்நிலையில், மும்பையில் அழியா மைக்குப் பதிலாக மார்க்கர் பேனா பயன்படுத்தப்படுவது சர்ச்சை ஆகியுள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் வாக்காளர்கள் தங்கள் அதிருப்தியை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர். இது இப்போது கவனம் பெற்றுள்ளது. “வாக்காளர்களின் விரலில் வாக்களித்தமைக்கு அடையாளமாக வைக்கப்படும் மார்க்கர் பேனா மையின் அடையாளத்தை எளிதில் அழித்து விடலாம். மேலும், இதன் மூலம் போலி வாக்குகள் பதிவாகவும் வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவும் கண்டனம் தெரிவித்துள்ளன. “ஒட்டுமொத்தமாக இந்த தேர்தல் நியாயமானதாக நடைபெறவில்லை. இது ஜனநாயகத்துக்கு அழகல்ல. தேர்தலை நடத்தும் நிர்வாகிகள் ஆளும் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். அனைவரும் விழிப்போடு இருக்க வேண்டும். சிவசேனா மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் இந்த விவகாரத்தை கவனத்துடன் கையாள வேண்டும்.
தேர்தலுக்கு முன்பாக வாக்குப்பதிவு இயந்திரத்தை கூட அரசியல் கட்சிகளின் பார்வைக்கு மாநில தேர்தல் ஆணையம் வைக்கவில்லை. மார்க்கர் பேனாவில் வைக்கப்படும் அடையாளத்தை எளிதில் சானிடைசர் கொண்டு அழிக்க முடிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன” என மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
“தேர்தலில் பயன்படுத்தப்படும் மை குறித்து விசாரிக்கப்படும். முதற்கட்ட தகவலின் அடிப்படையில் விரலின் நகத்தில் உள்ள மையினை அழிக்க முடிவதாகவும், அதற்கு மேல் உள்ள தோல் மீதான மையினை அழிக்க முடியவில்லை என்றும் தெரிகிறது” என்று மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷன் தெரிவித்துள்ளார்.