சுஜாதா சர்மா | கோப்புப் படம்

இந்தியா

எரிபொருள் பயன்பாட்டை குறைக்க ஒன்றிணைவோம்: மக்களுக்கு மத்திய அரசு அழைப்பு

மோகன் கணபதி

புதுடெல்லி: நாட்டின் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிசக்தியைத் சேமிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா கேட்டுக்கொண்டுள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுஜாதா சர்மா, “மேற்கு ஆசிய நெருக்கடி காரணமாக எரிசக்தி விநியோகத்தில் சர்வதேச அளவில் தடைகள் ஏற்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான். இதனால், சர்வதேச சந்தையில் விலைகளின் ஏற்ற இறக்கம் அதிகரித்து காணப்படுகிறது. எனினும், இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம், எரிபொருள் விநியோகம் சாமானிய நுகர்வோருக்கு குறைந்தபட்ச சிரமத்துடன் சென்றடைவதை உறுதி செய்ய முயன்றுள்ளது.

நமது கச்சா எண்ணெய் இருப்பு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. நமது சுத்திகரிப்பு நிலையங்கள் முழு திறனுடன் இயங்கி வருகின்றன. எந்தவொரு சில்லறை விற்பனை நிலையத்திலும் எரிபொருள் தீர்ந்துபோனதாக தகவல் இல்லை. பெட்ரோல், டீசல் ஆகியவை போதுமான அளவு கையிருப்பில் உள்ளது. வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி விநியோகமும் தடையின்றி நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று நாட்களில் ஒரு கோடியே 26 லட்சம் எல்பிஜி முன்பதிவுகளுக்கு 1.14 கோடி எல்பிஜி சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வணிக ரீதியிலான எல்பிஜி விற்பனை கடந்த மூன்று நாட்களில் 17,000 டன்களைத் தாண்டியுள்ளது. வாகனங்களுக்கான எல்பிஜி (Auto LPG) விற்பனையும் 762 டன்களைக் கடந்துள்ளது.

நாட்டின் அனைத்து குடிமக்களும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார். சாத்தியமான இடங்களில் எல்லாம் மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துங்கள். ஒரே வாகனத்தில் பலரும் பயணிக்கும் முறையைத் தேர்ந்தெடுங்கள். சரக்கு போக்குவரத்துக்கு ரயில்வையை முதன்மை போக்குவரத்து முறையமாகக் கருதுங்கள்.

சாத்தியமான இடங்களில் எல்லாம் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரியுங்கள். நாட்டின் மீது அதிகரித்து வரும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் எரிசக்தியைத் சேமிக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT