கண்ணூர்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) கடந்த முறையை விட அதிக இடங்களைக் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று முதல்வர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கண்ணூரில் தனது வாக்கினை பதிவு செய்தபின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கேரள மக்கள் கடந்த பத்து ஆண்டுகளாக இடதுசாரி அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், வளர்ச்சிப் பணிகளையும் அணுஅணுவாகக் கவனித்து வருகின்றனர். எங்கள் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை வைத்துள்ளனர். எதிர்க்கட்சிகள் பரப்பும் பொய்ப் பிரசாரங்களோ அல்லது மதவாத அரசியலோ எங்களை வீழ்த்த முடியாது.
கேரளாவின் வளர்ச்சிப் பாதையைத் தொடர வேண்டுமா அல்லது எதிர்க்கட்சிகளின் பிடியில் சிக்கி கேரள மாநிலம் பின்னோக்கிச் செல்ல வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் இது.
எங்களது அரசு செயல்படுத்திய லைஃப் மிஷன் வீட்டு வசதித் திட்டம், சுகாதாரத் துறையில் ஏற்படுத்தப்பட்ட புரட்சி, சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய உயர்வு போன்றவை எங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.
2021-ம் ஆண்டு தேர்தலை விடவும் இந்த முறை இடது முன்னணிக்குக் கூடுதல் இடங்கள் கிடைக்கும். கேரளாவில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை மக்கள் மீண்டும் எங்களுக்கு வழங்குவார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி கேரளா முன்னேறும். இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.