திருவனந்தபுரம்: கேரள முதல்வர் வி.டி.சதீஷன் உட்பட அவரது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளவர்களுக்கான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்புதலை ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் வழங்கி உள்ளார்.
அதன்படி, நிதியமைச்சகம், சட்டம், பொது நிர்வாகம், துறைமுகங்கள் உள்ளிட்ட 35 துறைகளை முதல்வர் வி.டி. சதீஷன் தன் வசம் வைத்துள்ளார். இதன்மூலம், முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரங்கள் கணிசமான அளவில் முதல்வர் வசமே உள்ளன.
காங்கிரஸ் மூத்த தலைவரான ரமேஷ் சென்னிதாலாவுக்கு மிக முக்கிய துறைகளான உள்துறை, ஊழல் தடுப்புத் துறை ஆகியவை ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த துறைகளுடன் மேலும் மூன்று துறைகளும் ரமேஷ் சென்னிதாலாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் சன்னி ஜோசப்புக்கு, மின்சாரம், சுற்றுச்சூழல், நாடாளுமன்ற விவகாரம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவரான கே. முரளிதரனுக்கு சுகாதாரம், மருத்துவக் கல்வி, மருத்துவப் பல்கலைக்கழகங்கள், ஆயுஷ், மருந்து கட்டுப்பாடு, உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் அணில் குமாருக்கு நில வருவாய், நில சீர்திருத்தம் ஆகிய துறைகளும், அமைச்சர் விஸ்வநாத்துக்கு சுற்றுலா, கலாச்சாரம், கேரள மாநில திரைப்பட வளர்ச்சிக் கழகம் உள்ளிட்ட துறைகளும், அமைச்சர் எம்.லிஜுவுக்கு கூட்டுறவு மற்றும் சுங்கத்துறையும்,அமைச்சர் ரோஜி எம் ஜானுக்கு கல்லூரி கல்வி, தொழில்நுட்ப கல்வி, பல்கலைக்கழகங்கள், நுழைவுத் தேர்வு ஆகிய துறைகளும், அமைச்சர் சித்திக்-க்கு விவசாயம், கேரள வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய துறைகளும், கே.ஏ.துளசிக்கு எஸ்சி, எஸ்டி, பிசி வளர்ச்சித்துறையும், பிந்து கிருஷ்ணாவுக்கு தொழிலாளர், கால்நடைகள், பால் உற்பத்தி, பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்றம் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் ஜனீஷ்க்கு விளையாட்டு, இளைஞர் நலன், பத்திரப்பதிவு, தொல்லியல் உள்ளிட்ட துறைகளும், அமைச்சர் பி.கே. குனாலிகுட்டிக்கு தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, சுரங்கம் உள்ளிட்ட துறைகளும், அமைச்சர் சம்சுதீனுக்கு பொது கல்வி, எழுத்தறிவு இயக்கம், வக்பு மற்றும் ஹஜ் பயணம், சிறுபான்மையினர் நலன் ஆகிய துறைகளும், அமைச்சர் கே.எம். ஷாஜிக்கு பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட துறைகளும், அமைச்சர் பஷீருக்கு பொதுப்பணித்துறையும், அமைச்சர் அப்துல் கப்பாருக்கு மீன்வளம், சமூக நீதி ஆகிய துறைகளும், அமைச்சர் மன்ஸ் ஜோசப்புக்கு பாசனம், நிலத்தடி நீர், குடிநீர் விநியோகம், கழிவுநீர் அகற்றம், வீட்டு வசதி ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அமைச்சர் அனூப் ஜேகப்புக்கு உணவு, நுகர்வோர் நலன் துறைகளும், அமைச்சர் ஷிபு பேபி ஜானுக்கு வனம், வன விலங்கு பாதுகாப்பு, திறன் மேம்பாடு ஆகிய துறைகளும், அமைச்சர் சி.பி. ஜானுக்கு சாலைப் போக்குவரத்து, மோட்டார் வாகனங்கள் ஆகிய துறைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.