திருவனந்தபுரம்: வீட்டுக்கு அருகே பணி (டபிள்யூஎன்எச்) மையம் என்று அழைக்கப்படும் புதிய திட்டம் கேரளாவில் 19-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து கேரள நிதித்துறை அமைச்சர் கே.என்.பாலகோபால் கூறியதாவது: கேரள மாநிலத்தின் முதலாவது வீட்டுக்கு அருகே பணி(டபிள்யூஎன்எச்) மையத்தை கொட்டாரக்கராவில் முதல்வர் பினராயி விஜயன் 19-ம் தேதி தொடங்கி வைப்பார்.
இங்குள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் சீரமைக்கப்பட்டு டபிள்யூஎன்எச் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உலகத் தரத்தில் பணி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை தொழில்நுட்ப நிபுணர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிவேக இணைய வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு இருக்கும்.
எனவே தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் தங்கள் வீட்டுக்கு அருகே அமைக்கப்படும் இந்த பணி நிலைய மையங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படும்.
கேரள மாநில டெக்னோபார்க் மற்றும் சைபர்பார்க் உதவியுடன் இவை அமைக்கப்படுகின்றன. ஊரகப்பகுதியில் உள்ளவர்களின் திறமையையும், உலக அளவிலான வேலைவாய்ப்பு சந்தர்ப்பத்தையும் இணைக்கும் பாலமாக இது செயல்படும். விரைவில் களமச்சேரி, ராமானாட்டுக்கரா, தளிபரம்பா ஆகிய நகரங்களில் இது விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.