திருவனந்தபுரம்: கேரளா பெயர் மாற்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை அடுத்து, கேரளா என்ற மாநிலத்தின் பெயர் அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ ஆக மாறுகிறது.
கேரளாவின் பெயரை கேரளம் என்று மாற்றுவதற்கும், அதற்கேற்ப அரசியலமைப்பின் முதல் அட்டவணையை திருத்துவதற்கும், அரசியலமைப்பின் 3-வது பிரிவின் கீழ் கேரள பெயர் மாற்ற மசோதா வழிவகுக்கிறது.
இந்த மசோதா கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையிலும், புதன்கிழமை மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன், இந்த மசோதா இப்போது சட்டமாகியுள்ளது.
‘கேரளா’ இனி 'கேரளம்' மாநிலம் என்று அழைக்கப்படும் என்பதை இந்த மசோதா உறுதி செய்கிறது. கேரள அரசு, சட்டப்பேரவையில் மாநிலத்தின் பெயர் மாற்ற தீர்மானத்தை 2024 ஜூன் மாதத்தில் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அந்த முன்மொழிவை மாநில சட்டப்பேரவையின் கருத்துக்காக அனுப்பினார். அதைத் தொடர்ந்து, கேரள சட்டப்பேரவை பெயர் மாற்ற முன்மொழிவை ஏற்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது.
தற்போது கேரள பெயர் மாற்ற மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இந்திய அரசியலமைப்பின் முதல் அட்டவணையில் 'கேரளா' என்ற பெயர் நீக்கப்பட்டு 'கேரளம்' என்று மாற்றப்படும்.